இலங்கையை கண்டித்து அம்பிகை செல்வகுமார் லண்டனில் 16-வது நாளாக போராட்டம்... ஆதரவாக திரண்ட தமிழர்கள்!
லண்டன்: இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் தொடர்புடைய இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஈழத்தமிழ் பெண் அம்பிகை செல்வகுமார் தொடர்ந்து 16-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கு ஆதரவாகவும், இலங்கையை கண்டித்தும் இங்கிலாந்தில் வசிக்கும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரதம் இருக்கும் வீட்டின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
இலங்கைக்கு எதிராக ஈழத்தமிழ் பெண் போராட்டம்
இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் தொடர்புடைய இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஈழத்தமிழ் பெண் அம்பிகை செல்வகுமார் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதாவது கடந்த பிப்ரவரி 27-ம் தேதி முதல் தொடர்ந்து 16-வது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அம்பிகை செல்வகுமாருக்கு குவியும் ஆதரவு
இவருக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் ஆதரவு குரல்கள் எழுந்து வருகின்றன. ஈழத் தமிழ்ப் பெண் உயிரைக் காப்பாற்ற உலகத் தமிழர்கள் முன்வரவேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் சில நாட்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்தார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அம்பிகை செல்வகுமார் உறுதியாக உள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
இந்த நிலையில் ஈழத்தமிழ் பெண் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாகவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இங்கிலாந்தில் வசிக்கும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரதம் இருக்கும் வீட்டின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் இருபுறமும் வரிசையாக அணிவகுத்து நின்ற அவர்கள், ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
|
கமல்ஹாசன் ஆதரவு
இதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ''இன அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பிப்ரவரி 27 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும்.சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.