லெய்செஸ்டர் மோதல் சம்பவம்.. இந்து- முஸ்லீம் ஒற்றுமை தேவை.. இரு மதத் தலைவர்களும் கூட்டறிக்கை
லண்டன்: கடந்த மாதம் 28ம் தேதி இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதையடுத்து, இந்நகரத்தில் இந்து-இஸ்லாம் குழுக்களிடையே தொடர்ந்து மோதல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின.
தற்போது இந்த வன்முறை சம்பவங்களை தவிர்க்க இரு மத தலைவர்களும் கூட்டு அறிக்கையை விடுத்துள்ளனர். அதில், 'பிரிவினையை ஏற்படுத்தும் சித்தாந்தத்திற்கு இங்கு இடமில்லை' என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி இதுக்காக தான் டெல்லி போனாராம்.. 'குடும்பம்’ - கொளுத்திப் போட்ட கோவை செல்வராஜ்!
மோதல்
லெய்செஸ்டர் நகரத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டத்தையடுத்து இந்த பகுதியில் இந்து-இஸ்லாம் குழுக்களிடையே தொடர்ந்து மோதல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இந்த மோதலின் உச்சமாக, இந்து கோயிலில் கட்டப்பட்டிருந்த காவி கொடியை சிலர் கிழித்தெறிந்தனர். இது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இதுபோன்ற தொடர் வன்முறை காரணமாக தற்போதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
கூட்டறிக்கை
எனவே வன்முறையை தவிர்க்க ஜேம் மசூதி மற்றும் இஸ்கான் இந்து கோயின் மத தலைவர்கள் கூட்டறிக்கையை விடுத்துள்ளனர். அதில், "இரு மதத்தை சேர்ந்த நாங்கள், ஒன்றாகதான் இந்நகரத்திற்கு வந்தோம். இங்குள்ள இனவெறி உள்ளிட்ட சவால்களை ஒன்றாகதான் எதிர்கொண்டோம். லெஸ்டர் குடும்பமாகிய நாங்கள் இந்து, இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்று. நாங்கள் சகோதர சகோதரிகளும் கூட. எனவே பிரிவினையை ஏற்படுத்தும் சித்தாந்தத்திற்கு இங்கு இடமில்லை." என்று கூறியுள்ளனர்.
வலியுறுத்தல்
மேலும், "அரை நூற்றாண்டுக்கும் மேலாக இணக்கமாக வாழ்ந்து வந்த நாம், இந்து மற்றும் இஸ்லாம் மதத்தின் புனித தலங்களின் புனிதத்தை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எந்த மதத்திற்கு எதிரான இழிவான கோஷங்கள், வழிபாட்டிற்கு எதிரான தாக்குதல்கள் என எதையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மக்களும் இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு இடமளிக்க வேண்டாம்" என்றும் மதத்தலைவர்கள் தங்கள் கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
சிறைத்தண்டனை
இந்த மத மோதல்கள் இந்நகரத்தில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கையில் ஆயுதம் வைத்திருந்ததற்காக 10 மாத சிறைத்தண்டையை பெற்றுள்ளார். வன்முறை வழக்கு தொடர்பான இந்த தீர்ப்பு நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியுள்ளது. அதேபோல இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெளி நகரங்களிலிருந்து வந்தவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து-இஸ்லாம் குழுக்களிடையேயான மோதல் லெய்செஸ்டர் நகரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு மதத்தலைவர்களும் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை இந்த பதற்றத்தை தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.