முற்றிலும் ஒழிந்ததாக கருதப்பட்ட போலியோ மீண்டும் பரவுகிறது.. அமெரிக்கா, இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு
லண்டன்: அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாடுகளில் மீண்டும் போலியோ நோய் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் தடுப்பு மருந்துகளின் காரணமாக பரவுவதாக கூறப்படுகிறது.
Recommended Video
போலியோ அல்லது இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோமைலிட்டிஸ் ஒரு தீவிரமான தொற்று நோய் ஆகும். இந்த நோயானது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகளவில் பாதிக்கும்.
இதன் நோய் பாதித்தால் காய்ச்சல், தலைவலி, சோர்வு, வாந்தி, உடல் வலி போன்றவை ஏற்படும். இதில் ஒருசிலருக்கு குணப்படுத்த முடியாத அளவிற்கு மாறி இறப்பையும் ஏற்படுத்துகிறது.
முகச் சிதைவு நோய் பாதிப்பு.. சிறுமி உருக்கமான கோரிக்கை! உடனே உதவி கரம் நீட்டிய திருவள்ளூர் கலெக்டர்
போலியோ பரவுவதற்கான சான்று
எனவே இந்த போலியோ நோயை தடுக்க வாய்வழியாக செலுத்தப்படும் திரவ சொட்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. போலியோவை ஒழிக்க பல தசாப்தங்களாக உலக நாடுகள் போராடிக்கொண்டு இருக்கிறது. இதில் ஏறத்தாழ வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீர் திருப்பமாக ஜெருசலேம், நியூயார்க், லண்டன் ஆகிய நகரங்களில் போலியோ பரவுவதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பு மருந்தில் இருந்தே பரவுகிறதா?
போலியோ வைரஸ் எங்கிருந்துதான் பரவுகிறது என்று பார்த்தால் தடுப்பு மருந்தில் இருந்தே பரவுதாக விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது. இத்தகைய அரிதான நிகழ்வுகளை பற்றி விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்றும், இதன் காரணமாகவே சில நாடுகள் பிற போலியோ தடுப்பு மருந்துகளுக்கு மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வாய்வழியாக (ஓரல்) செலுத்தப்படும் மருந்துகளால் தற்செயலாக பரவும் இந்த தொற்று போலியோவை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடைய உலகம் நெருங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலாக இது அமைந்துள்ளது.
396 பேருக்கு பாதிப்பு
இயற்கையான சுழற்சி மூலம் பரவல் போலியோ குறையத்தொடங்கியிருக்கும் நிலையில், இது புது சவாலாக இருக்குமோ? என்ற கவலை எழாமல் இல்லை. 2017 -ம் ஆண்டு முதல் இயற்கையான போலியோ வைரஸ் மூலம் 396 பேருக்கு பாதிப்பு ஏற்படுள்ளது. அதேவேளையில், ஓரல் வேக்சின் மூலமாக 2,600 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதன் உடன் தொடர்புடைய பிற அமைப்புகள் வெளியிட்ட தரவுகள் தெரிவித்துள்ளன.
குரங்கு அம்மை குறித்தும் கவலை
இயற்கையான வைரஸ்களை வேக்சினில் உள்ள வைரஸ் மூலமாக அழித்து வருகிறோம். ஆனால், தற்போது இதுவே புதிய பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்காட் பேராட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவுவதை மிக விரைவாக நிறுத்த முடியும் என்று நான் கருதுகிறேன். ஆனால் நாங்கள் குரங்கு அம்மை குறித்தும் கவலை கொள்கிறோம்" என்றார்.
எந்த அறிகுறிகளும் இல்லை
தடுப்பு மருந்து தொடர்புடைய போலியோ வைரஸ் பரவல் வளர்ந்த நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது பல ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டு துவக்கத்தில் இஸ்ரேலில் தடுப்பூசி போடப்படாத 3 வயதான ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. முடக்குவாதத்தால் இந்த குழந்தை பாதிக்கப்பட்டது. இதுபோக மேலும் சில குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தகுழந்தைகள் யாரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள். இவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை.
பூஸ்டர் தடுப்பு மருந்து
கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் கழிவுநீரில் போலியோ வைரஸ் இருப்பதை கண்டறிந்தனர். மக்கள் யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும் உடனடியாக ஒரு வயது 9 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் பூஸ்டர் தடுப்பு மருந்து செலுத்த உத்தரவிட்டது. அமெரிக்காவில் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளாத இளம் சிறார் ஒருவருக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டது. காலில் முடக்குவாத பாதிப்பு ஏற்பட்டது. நியூயார்க்கில் உள்ள கழிவுநீர் சாக்கடைகளில் வைரஸ் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேவேளையில், அதிக அளவில் தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளதால் போலியோ பரவாது என்றும் பூஸ்டர் தேவையில்லை எனவும் தெரிவித்தனர்.
தடுப்பூசியில் இருந்து பெறப்பட்டவை
மூன்று நாடுகளில் கண்டறியப்பட்ட வைரஸ்கள் அனைத்தும் "தடுப்பூசியில் இருந்து பெறப்பட்டவை" என்று ஜெனட்டிக் ஆய்வுகளில் தெரியவந்தது. இதன் அர்த்தம் என்னவென்றால், ஓரல் வேக்சினில் உள்ள வைரசில் இருந்த உருமாறிய வெர்ஷன் என்பதேயாகும். போலியோவுக்கு எதிராக ஓரல் வேக்சின் 1988 ஆம் ஆண்டு முதலே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மலிவானது மற்றும் எளிதில் செலுத்தக்கூடிய ஓரல் வேக்சினில் லைவ் வைரசின் பலவீனமான அம்சம் இடம் பெற்றிருக்கும்.
உருமாறி மிகவும் ஆபத்தாக மாறும்
ஆனால், 20 லட்சம் டோஸ்களில் இரண்டு முதல் 4 குழந்தைகளுக்கு போலியோ ஏற்பட இதுவும் ஒரு காரணமாக இருக்கும். மிகவும் அரிதாக சில வேளைகளில் பலவீனமான வைரசும் உருமாறி மிகவும் ஆபத்தாக மாறி போலியோ பரவலுக்கு வழிவகுக்கும். குறிப்பாக மோசமான சுகாதாரம் மற்றும் தடுப்பூசி குறைந்த அளவில் செலுத்தப்படும் இடங்களில் இது ஏற்படலாம். போலியோவை ஒழித்த பல நாடுகள் தற்போது ஊசி மூலம் செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளுக்கு மாறிவிட்டன. இத்தகைய தடுப்பூசிகளில் வைரசின் இறந்த வடிவமே இருக்கும். லைவ் வைரஸ் இடம் பெற்றிருக்கும் தடுப்பு மருந்தால் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் வகையில் இந்த முறைக்கு பல நாடுகள் மாறிவிட்டன.
ஓரல் வேக்சின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதே
நோர்டிக் நாடுகள் என்று சொல்லப்படும் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகள் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஒருபோதும் ஓரல் வேக்சினை பயன்படுத்தியது இல்லை. இயற்கையான போலியோ வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்ட பிறகு ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசிக்கு மாற வேண்டும் என்பதே இறுதி இலக்கு என்று கூறப்படும் நிலையில், இந்த மாற்றம் உடனடியாக இருக்க வேண்டும் என்பது சில விஞ்ஞானிகளின் வாதமாக உள்ளது. போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்கான ஒரே வழி ஓரல் வேக்சின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதே என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.