2020 மேல செமகோபம் இருக்கலாம்.. அதுக்காக இப்டியா துப்பாக்கி, பீரங்கி எல்லாம் வச்சி..!
இங்கிலாந்தில் கொரோனாவால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்கும் வகையில் கார்களை துப்பாக்கியால் சுட்டு அழிக்க ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
லண்டன்: 2020ம் ஆண்டில் கொரோனாவால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சுட்டுத்தள்ள இங்கிலாந்து நாட்டில் இயங்கி வரும் கார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 2020ம் ஆண்டு மிகப் பெரிய தடத்தை பதித்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் இந்த ஆண்டு கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் இன்னுமும் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாக திரும்ப முடியாமல் பல நாடுகள் தவித்து வருகின்றன.
ஏழை எளிய மக்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு நிர்கதியாய் நிற்கின்றனர். பணக்காரர்கள் கூட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பெரும்பாலான மக்களுக்கு 2020ம் ஆண்டு மன உளைச்சலையே தந்துள்ளது.
எனவே 2020ம் ஆண்டின் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். கையில் ஒரு துப்பாக்கி கிடைத்தால் 2020ஐ சுட்டுத்தள்ள பலர் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டு வரும் கார் நிறுவனம் ஒன்று.
பழைய கார்களின் மீது 2020 என எழுதி அதை வாடிக்கையாளர்களின் கண் முன் நிறுத்தி, கையில் இயந்திர துப்பாக்கியையும் அந்த நிறுவனம் தருகிறது. கையில் துப்பாக்கி, எதிரில் 2020 என எழுதப்பட்ட கார். சும்மா இருப்பார்களா நம் மக்கள். படபடவென சுட்டுத் தள்ளுகிறார்கள்.
அதுமட்டும் போதாது என சுமார் 56 டன் எடைகொண்ட பீரங்கியை அந்த கார்களின் மீது ஏற்றி சுக்குநூறாக உடைக்கவும் செய்கிறார்கள். இதன் மூலம் 2020ம் ஆண்டின் மீதான கோபத்தை போக்கிக்கொள்ள முடியும் என அந்த கார் நிறுவனம் நம்புகிறது.