ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு: ஜோ பைடனே ஆனாலும் பஸ்ல தான் வரணும்?.. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்க, வருபவர்கள் அனைவரும் பஸ்ல தான் வர வேண்டும் என்றும் இது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட உலக தலைவர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்றும் அந்நாட்டின் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இதனால் அவர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை வீட்டிலேயே அவர் தங்கியிருந்தார். உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரை அங்கிருந்தபடியே டாக்டர்களும் கவனித்து வந்தனர்.
டைம் கேப்சியூலில் இருக்கும் கடிதம்.. ராணி எலிசபெத்திற்கு மிகவும் பிடித்த ஆஸ்திரேலியா! சுவாரசியம்
இங்கிலாந்து ராணி மறைவு
இந்த நிலையில் திடீரென அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டார். எனினும் கடந்த 9-ஆம் தேதி அவர் உயிர் பிரிந்தது. அவர் உயிரிழந்ததை இங்கிலாந்து அரண்மனையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இங்கிலாந்தின் நீண்டகால ராணியாக பதவி வகித்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவை அறிந்து அந்நாட்டு மக்கள் பேரதிர்சி அடைந்தனர்.
பிரதமர் மோடி இரங்கல்
இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் இரங்கல் தெரிவித்தார். இதேபோல் உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ராணி எலிசபெத் மறைவையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசியக்கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டும், அரசு நிகச்ழ்சிகள் நடத்தப்படாமலும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடன் பங்கேற்பு
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் வெளிநாடுகளின் தலைவர்கள் முக்கிய பிரதிநிதிகள் என 500- க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அடங்குவார். உலகின் மிக முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருப்பதால் இறுதிச்சடங்கு நடைபெறும் வெஸ்ட் மினிஸ்டர் அபே பகுதியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சொந்த வாகனங்களில் பயணிக்கக்கூடாது
இங்கிலாந்தில் கடந்த 6 தசாப்தங்களுக்குப் பிறகு நடைபெறும் முதல் அரசு இறுதிச்சடங்கு என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இறுதிச்சடங்கில் பங்கேற்க வரும் உலக நாடுகளின் தலைவர்கள் யாரும் சொந்த வாகனங்களில் பயணிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே அல்லது லண்டலின் பயணிக்கும் போது ஹெலிகாப்டர்களை பயன்படுத்தக்கூடாது என்றும் மேற்கு லண்டனில் இருந்து அப்பே நகருக்கு தனியார் பேருந்துகள் மூலம் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பேருந்துகளில் தான் வரவேண்டுமா?
இது தொடர்பாக இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்க இருக்கும் தலைவர்களின் நாட்டு தூதரகங்களுக்கு புரோட்டாகால் தகவல் அனுப்பட்டுவிட்டதாகவும் அதிகரிகள் தரப்பில் கூறும் தகவலாக உள்ளது. ஆனாலும், ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களும் பேருந்துகளில் தான் வரவேண்டுமா? என்பது பலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. ஏனெனில் எங்கு சென்றாலும் அமெரிக்க அதிபர்கள் பீஸ்ட் என்ற பிரத்யேக ஆயுதம் வசதிகள் கொண்ட காரில் பயணிப்பதுதான் வழக்கம்.
ஜோ பைடன் பேருந்தில் பயணிப்பார்?
ஆனால், அதை தவிர்த்து ஜோ பைடன் பேருந்தில் பயணிப்பார் என்பதை கற்பனை செய்ய முடிகிறதா? என்று லண்டனில் உள்ள வெளிநாட்டு தூதர் ஒருவர் கூறியதாக அங்குள்ள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இவ்விவகாரம் தொடர்பாக லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை. 1965 ஆம் ஆண்டு வின்ஸ்டன் சர்ச்சில் மறைவுக்குப் பிறகு இங்கிலாந்தில் நடைபெறும் முதல் அரசு இறுதிச்சடங்கு இதுவேயாகும். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.
3 நிமிடங்கள் இரங்கல் உரை..
இங்கிலாந்து முழுவதிலும் இருந்து லண்டனுக்கு போலீசார் பாதுகாப்பு பணிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ராணியின் உடல் வைக்கப்பட்டு இருக்கும் சவப்பெட்டி பாராளுமன்றத்தில் வைக்கப்படும் போது இறுதி அஞ்சலி செலுத்தும் உலக தலைவர்கள் 3 நிமிடங்கள் இரங்கல் உரையும் நிகழ்த்த அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த இரங்கல் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இறுதிச்சடங்கில் பங்கேற்க வரும் உலக தலைவர்களுக்கு மன்னர் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து விருந்து வரவேற்பு அளிப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.