"லாங் கோவிட்!" மீண்டும் மிரட்டும் கொரோனா.. 500 நாட்கள் தாண்டி நீடிக்கும் பாதிப்பு! ஆய்வாளர்கள் பகீர்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் நோயாளி ஒருவருக்கு 500 நாட்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில், இது தொடர்பாக ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை கொரோனா வைரஸ் தான் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகின் வளர்ந்த நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட பின்னரே, உலகில் வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கிறது. கொரோனா குறித்த ஆய்வுகளும் ஒரு புறம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதிகரிக்கும் கொரோனா... உஷார் நிலையில் அரசு.. மருத்துவமனைகளுக்கு அதிரடியாக பறந்த உத்தரவு
505 நாட்கள்
இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்ட நோயாளி ஒருவருக்கு 500 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் இருந்து வருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலகில் வேறு யாருக்கும் இவ்வளவு நாட்கள் கொரோனா பாதிப்பு இருந்ததில்லை. அவருக்கு 505 நாட்கள் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில், இது தான் மிக நீண்ட கொரோனா பாதிப்பு என்று தொற்று நோய் வல்லுநர் லூக் பிளாக்டன் ஸ்னெல் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு
இதற்கு முன்பு, நோயாளி ஒருவருக்கு 335 நாட்கள் கொரோனா பாதிப்பு இருந்ததே ஒருவருக்கு அதிக நாட்கள் கொரோனா இருந்ததாகும். பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்குச் சராசரியாக 10 முதல் 15 நாட்கள் வரை மட்டுமே கொரோனா பாதிப்பு இருக்கும். ஆனால், நேயெதிர்ப்பு சக்தி குறைவு உள்ளிட்ட சில காரணங்களால் சிலருக்கு மட்டும் வைரஸ் பாதிப்பு நீண்ட காலம் இருக்கும். இதற்கான காரணத்தைக் கண்டறிய உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
லாங் கோவிட்
அதன்படி குறைந்த நோயெதிர்ப்பு சக்தி கொண்ட 9 நோயாளிகளிடம் இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, எச்.ஐ.வி, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்குச் சிகிச்சை பெற்றவர்கள் ஆகும். இதனால் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமான இருந்துள்ளது. அவர்களுக்குச் சராசரியாக 73 நாட்கள் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. குறிப்பாக அவர்களில் இருவருக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக வைரஸ் இருந்தது.
கொரோனா தொடரும்
இது தொடர்பாக ஆய்வாளர் கூறுகையில், "நீண்ட கால கொரோனா பாதிப்பில், உடலில் இருந்து வைரஸ் அழிக்கப்பட்டுவிட்டதாகவே தெரியும். ஆனால், அறிகுறிகள் தொடரவே செய்யும். இது வைரஸ் முழுமையாக அழிவதில்லை என்பதையே காட்டுகிறது" என்றார்.
மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை
கொரோனா தொடரும் நிலையில், ஆய்வாளர்கள் அவ்வப்போது மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை நடத்தி கொரோனா உருமாறி உள்ளதா என்பதையும் கண்டறிய முயல்கின்றனர். காலப்போக்கில் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதை ஆய்வாளர்கள் இதன் மூலம் கண்டறிந்துள்ளனர். 9 நோயாளிகளிடம் உடலிலும் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. இருப்பினும், அவை கவலையை ஏற்படுத்தும் அளவுக்குத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்ததில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
சிகிச்சை முறை
இதற்கு முன் நீண்ட கொரோனா பாதிப்பு உடையவர் 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர். அவருக்கு ஆன்டி வைரல் மருந்து, ரீடெசிவர் ஆகியவை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி 2021இல் பலியானார். அதேநேரம் இருவர் கூடுதல் சிகிச்சை எதுவுமின்றி நீண்டகால கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இருவர் கூடுதல் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். இந்த லாங் கொரோனா குறித்தும் இதற்கான சிகிச்சை முறை குறித்தும் தொடர்ச்சியாக ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.