T 90 பீரங்கியிலிருந்து பாய்ந்து வந்த குண்டு.. பயிற்சியின்போது பரிதாபமாக பலியான 2 ராணுவ வீரர்கள்!
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராணுவ தளத்தில் பயிற்சியின் போது பீரங்கி குண்டு வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
T-90 வகை பீரங்கி வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. பயிற்சியின் போது திடீரென வெடித்த பீரங்கி குண்டு இரண்டு உயிர்களை பலிவாங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தின் ஜான்சி பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வீரர்கள் இன்று துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, T-90 வகை பீரங்கியிலிருந்து குண்டு ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். உயிரிழந்தவர்களில் ஒருவர் ஜூனியர் கமிஷன் அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

சிறப்பம்சம்
ஜான்சிக்கு அருகிலுள்ள பாபினா கண்டோன்மென்ட்டில் இந்த விபத்து நடந்துள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த வகை பீரங்கிகள் தற்போது வரை பயன்பாட்டில் உள்ளன. உக்ரைனுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் ராணுவ தாக்குதலில் ரஷ்யா இதனைத்தான் பயன்படுத்தி வருகிறது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 540 கிமீ தூரம் வரை 60 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது இந்த டி 90 ரக பீரங்கி. ரஷ்யா இந்தியா தவிர வேறு சில நாடுகளும் இந்த பீரங்கியை பயன்படுத்தி வருகிறது.

தனிச்சிறப்பு
சாதாரணமாக 3.5-4.0 கிமீ தொலைவு வரை இலக்குகளை இவை வெற்றிகரமாக தாக்கி அழிக்கும். அதேபோல இரவில் 3.2 கிமீ தொலைவுள்ள இலக்குகளை அழிக்கும். இந்த T 90ஐ சிரியாவின் உள்நாட்டு போர், டான்பாஸ் போர் மற்றும் 2020ம் ஆண்டு நடைபெற்ற நாகோர்னோ-கராபாக் போரில் ரஷ்யா பயன்படுத்தியுள்ளது. இதிலிருந்து தாக்குதல் நடத்தினால் இலக்கில் உள்ளவர்கள் நிச்சயம் உயிர் பிழைக்க முடியாது என்பது இதன் தனிச்சிறப்பு.

ரஷ்யா
இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த பீரங்கியிலிருந்து வெளியேறியிருக்கும் குண்டு ஒன்று 2 ராணுவ வீரர்களின் உயிரை பலிகொண்டுள்ளது. இது ரஷ்ய தயாரிப்பு பீரங்கி ஆகும். இது மட்டுமல்லாது இந்திய ராணுவத்தில் இருக்கும் பல போர் வாகனங்கள் ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்டதுதான். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து S-400 வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளை இந்தியா வாங்கியதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications