கர்ணன் போல மரப்பெட்டி.. சிவப்பு பட்டு போர்த்தி கங்கையில் மிதந்து வந்த பெண் குழந்தை
மரப்பெட்டியில் வைக்கப்பட்டு சிவப்பு பட்டு சுற்றி கங்கையில் மிதந்து வந்த குழந்தைக்கு கங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
லக்னௌ: கங்கை நதியில் மிதந்து வந்த அழகான மரப்பெட்டிக்குள் ஒரு பெண் குழந்தை இருந்ததை படகோட்டி ஒருவர் கண்டெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு கங்கா என பெயர்சூட்டப்பட்டுள்ளது. குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அரசே ஏற்றுக்கொள்ளும் என மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார்.
மகாபாரதத்தில் திருமணத்திற்கு முன்பாகவே தனக்கு கிடைத்த வரத்தின் மூலம் சூரியனின் ஆசியோடு குழந்தை பெற்றுக்கொள்வார் குந்தி தேவி. அந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் ஒரு பெட்டிக்குள் பட்டுத்துணி சுற்றி ஆற்றில் மிதக்க விட்டு விடுவார். அந்த குழந்தையை கர்ணன் என பெயர் சூட்டி தேரோட்டி ஒருவர் கண்டெடுத்து வளர்த்து வருவார்.
இந்த கதையைத்தான் ரஜினி நடித்த தளபதி படமாக எடுத்தார் மணிரத்னம். அதே பாணியில் ஒரு பெட்டியில் வைத்து பெண் குழந்தையை விட்டுள்ளனர்.
மரப்பெட்டியில் பச்சிளம் குழந்தை
உத்தரப்பிரதேச மாவட்டம் காசிப்பூர் பகுதியில் மரப்பெட்டி ஒன்று மிதந்து வந்துள்ளது. ஆற்றங்கரையோரம் படகில் இருந்த உள்ளூர் படகோட்டி குல்லு சவுதாரியின் கண்களில் அந்த பெட்டி தென்பட்டது. அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்கவே அக்கம் பக்கம் சுற்றிப்பார்த்துள்ளார்.
மரப்பெட்டியில் காளி தேவி படம்
அப்போது ஆற்றில் மிதந்து வந்த மரப்பெட்டியை எட்டிப்பிடித்து திறந்து பார்த்தார். அந்த பெட்டிக்குள் சிவப்பு நிற பட்டுத் துணியில் குழந்தை சுற்றி வைக்கப்பட்டிருந்தது. காளிதேவியின் புகைப்படம் அந்த மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
காவல்துறையினர் மீட்பு
அந்த மரப்பெட்டியில் குழந்தையின் பிறப்பு சான்றிதழும் இருந்துள்ளது. அந்தப்படகுக்காரர் குழந்தையை தானே வளர்க்க விரும்பி குழந்தையை வீட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளார். இந்த விவகாரம் குறித்து உள்ளூர் மக்கள் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தையை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட காவல்துறையினர் காப்பகத்தில் குழந்தையை சேர்த்தனர்.
ஆரோக்கியமான குழந்தை
குழந்தையின் பெயர் கங்கா என பிறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தை தண்ணீரில் தவறி விழுந்ததாக தெரியவில்லை. முழுவதுமாக தயார் நிலையில் வைத்து அனுப்பியுள்ளனர். அந்த மரப்பெட்டியை புதிதாக வாங்கியுள்ளனர். குழந்தையின் உடல்நலனை பரிசோதித்தோம் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
அரசு உதவி
குழந்தை மிதந்து வந்த மரப்பெட்டிக்குள் குழந்தை பிறந்த குறிப்புகள், ஜாதகம், காளி தேவியின் படம் மற்றும் அக்குழந்தை கங்கைமகள் என்று குறிக்கும் வாசகமும் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து கங்கையின் மகளை வளர்ப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் உத்தரப்பிரதேச மாநில அரசு செய்யும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், படகோட்டியின் மனிதாபிமான செயலையும் பாராட்டியுள்ளார்.
கங்கையில் வந்த பெண் மகள்
பல தம்பதியினர் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வருகின்றனர். சிலரோ தங்களுக்கு வரமாக கிடைத்த குழந்தையை வீசி விடுகின்றனர். இந்த கங்காவை பெற்ற தாயோ அழகாக மரப்பெட்டிக்குள் வைத்து கங்கையில் விட்டிருக்கிறார். இது நவீன மகாபாரத கதை போல உள்ளது. இந்த கங்கையின் மகள் வரும்காலத்தில் என்ன சாதனை செய்யப் போகிறாளோ பார்க்கலாம்.