வீட்டிற்கு போனால் அடிவிழுது.. 80 அடி உயர மரத்தில் குடியேறிய கணவன்.. உத்தர பிரதேசத்தில் விநோதம்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக கோபித்துக்கொண்டு கணவர் 80 அடி உயர மரத்தில் குடியேறியுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக அவர் மரத்தில் வசித்து வரும் நிலையில் தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
கணவன் - மனைவிக்கு இடையே சண்டை நடப்பது என்பது ஒன்றும் அரிதானது கிடையாது. இது ஏறத்தாழ எல்லோர் வீட்டிலும் நடக்கும் இயல்பான ஒன்றுதான்.
சில சமயம் கணவன் - மனைவி சண்டை சற்று பெரிதாகி கோபித்துக்கொண்டு சில நாட்கள் பேசாமல் இருப்பது கூட நடக்கத்தான் செய்கிறது.

கூட்டம் கூட்டமாக சென்று...
ஆனால், இத்தகைய சண்டைகள் எல்லாம் சில நாட்களில் சரியாகிவிடும். மீண்டும் இணைந்து தங்கள் அன்பை பரிமாறிக்கொள்வார்கள்... ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் தம்பதிக்கு இடையே நடைபெற்ற சண்டையை தொடர்ந்து கணவன் எடுத்த ஒரு முடிவு கடந்த சில தினங்களாக செய்திகளில் பரவி வருகிறது. பலரும் அவர் எங்கு வசித்து வருகிறார் என்பதை கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருவது தான் வேடிக்கை..

மரத்தில் குடியேறிய கணவர்
அப்படி என்னதான் நடந்தது என்று பார்த்தால் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு கணவர் 80 அடி உயர மரத்தில் குடியேறிவிட்டாராம். ஒருநாளோ, ஒருவாரமோ.. அல்ல.. சுமார் ஒரு மாத காலம் இப்படி வாழ்ந்து வருகிறாரம். இந்த வேடிக்கையான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- உத்தர பிரதேசத்தின் மவூ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் பிரவேஷ் (வயது 42). இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

வீட்டிற்கு வந்தால்தானே..
இதில் சில சமயம் மனைவி ராம் பிரவேஷை அடித்து நொறுக்கி விடுவாராம். இதனால் கடும் விரக்தியில் இருந்து வந்த ராம் பிரவேஷ் இனி வீட்டிற்கு வந்தால்தானே அடி விழும்.. என கோபித்துக்கொண்டு 80 அடி உயர மரத்தில் குடியேறி இருக்கிறார். ஒரு மாத காலமாக இப்படி மரத்தில் வசித்து வரும் ராம் பிரவேஷ், இயற்கை உபாதையை கழிக்க மட்டுமே கீழே வருவாராம். மற்றபடி உணவு எல்லாம் ஒரு கயிறு வழியாக கட்டி மேலே அனுப்பப்படுமாம். அவரது குடும்பத்தினர் தான் உணவை கயிறு கட்டி அனுப்புவார்களாம்.

அருகில் வசிப்பவர்களுக்கும் சிரமம்
மரத்தில் இருந்தபடியே உணவு உட்கொண்டு அங்கேயே தங்கியிருக்கிறார். ராம் பிரவேசின் இந்த செயலால் அருகில் வசிப்பவர்களுக்கும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. இதனால், மரத்தில் இருந்து இறங்கி விடுங்கள்.. என பக்கத்து வீட்டினர் ராம் பிரவேசிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், இதை ஏற்க மறுத்த ராம் பிரவேஷ், நான் மரத்தில் தான் குடியிருக்க போகிறேன் என சொல்லி அடம் பிடித்துள்ளார். இது சரிபட்டு வராது என்று எண்ணிய அவரது கிராமத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் பலமுறை கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல சொன்னாலும் அடம் பிடித்த ராம் பிரவேஷ் மரத்தில் இருந்து இறங்க மறுத்துவிட்டார். இதனால், ராம் பிரவேஷ் மரத்தில் வசிப்பதை வீடியோ எடுத்து பரவ விட்டுவிட்டு அவர்கள் சென்று விட்டனர்.

கிராமத்தினர் குற்றச்சாட்டு
இது குறித்து அந்த கிராமத்தின் தலைவர் தீபக் குமார் கூறியதாவது:- ''ராம் பிரவேஷ் மரத்தில் வசிப்பது அங்குள்ள மக்களுக்கு அசவுகரியாமாக உள்ளது. ஏனெனில், பல வீடுகள் அங்கு உள்ளன. மரத்தில் இருந்தபடி வீடுகளில் மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து கொண்டு இருக்கிறார். இது, கிராம மக்களின் பிரைவேசிக்கு இடையூறாக உள்ளது. எனவே, பல பெண்கள் ராம் பிரவேஷ் மீது புகார் தெரிவிக்கின்றனர். எனவே, நாங்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தோம். அவர்களும் வந்து சொல்லி பார்த்தனர். ஆனால், ராம் பிரவேஷ் இறங்க மறுத்ததால் வீடியோ எடுத்துவிட்டு சென்றுவிட்டனர்" என்றார்












Click it and Unblock the Notifications