மணக்கோலத்தில் காதலி.. பெண் வேடமிட்டு பார்க்க சென்ற காதலன்.. கடைசியில் நடந்ததுதான் செம ட்விஸ்ட்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மணக்கோலத்தில் இருக்கும் காதலியை பார்க்க பெண் வேடத்தில் சென்ற இளைஞன், பெண்ணின் உறவினர்களிடம் சிக்கிக் கொண்டார்.
இந்த பூமி உருவானது முதல் மனித உணர்வுகளை அசைத்து வருவது காதல். காதல் வயப்படாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.
காதல் ஒரு சிலரின் வாழ்க்கையை இன்பத்தில் மூழ்கடிக்கும். ஒரு சிலரின் வாழ்க்கையை துன்பத்தில் கரை சேர்க்கும்.

காதல் என்னும் மந்திரம்
காதலுக்கு கண் இல்லை என்று விளையாட்டாக கூறுவார்கள். ஒரு சிலர் தான் விரும்பும் காதலன்/ காதலிக்காக உயிரை கூட விடும் சம்பவங்களும் நடந்து வருகிறது. வேறு ஒரு சிலர் காதலி கிடைக்காத ஆத்திரத்தில் அவர்களை கொலை செய்வது, துன்புறுத்துவது போன்ற செயல்களை செய்து வருவது வாடிக்கையாகி விட்டது. காதலி வீட்டில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையை போல் பாதுகாப்புகள் நிறைந்து இருந்தாலும், எப்படியாவது அங்கு சென்று காதலை வளர்க்கும் காதலர்களும் உண்டு.

முறிந்து போன காதல்
இப்படிப்பட்ட காதலுக்காக வாலிபர் ஒருவர் செய்த வினோதமான முயற்சி உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. அதைப்பற்றித்தான் இப்போது பார்க்க போகிறோம். உத்தரபிரதேசத்தின் படோஹி பகுதியை சேர்ந்த ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களது காதல் கைகூடவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது.

காதலனின் யோசனை
ஏற்கனவே சோகத்தில் மூழ்கி இருந்த அந்த இளைஞன், இன்னொருவரின் மனைவியாவதற்கு முன்பு காதலியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று திட்டமிட்டார். சாதாரணமாக சென்றால் காதலியின் உறவினர்கள் விட மாட்டார்கள் என்பதால் அவரது மூளை வேறு மாதிரி யோசித்தது. இதனை தொடர்ந்து பெண்ணாக மாறி காதலியின் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டார் அந்த இளைஞன்.

பெண்ணாக மாறினார்
இதனால் தன்னை பெண் போல காட்டிக் கொள்ள சுடிதார் உடுத்திக் கொண்டார். முகச்சாயம், உதட்டு சாயம் என பெண்கள் பயன்படுத்தும் அனைத்து சாயங்களையும் பூசிக் கொண்டார். கம்மல், வளையல், கொலுசு என பெண்களுக்கு உரித்தான அனைத்து ஐட்டங்களையும் அணிந்து கொண்டார். தலையில் பெண்கள் கூந்தலை போன்று விக்(செயற்கை முடி) வைத்துக் கொண்டார். பினிஷிங் டச்சாக ஹைகீல்ஸ் காலணிகள், பெண்களின் டிரேட் மார்க்கான தோள்பையை மாட்டிக் கொண்டார்.

முழுசாக மாறினார்
''பார் முழுசா சந்திரமுகியாக மாறி இருக்கும் உன் மனைவி கங்காவை பார்'' என்பது போல் மணக்கோலத்தில் இருக்கும் காதலிக்காக முழுமையான பெண்ணாக மாறி, நண்பருடன் திருமணம் நடக்கும் இடம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார். பின்னர் திருமண வீட்டில் தான் நினைத்தபடி காதலி/மணப்பெண்ணின் அறையை நோக்கி மெதுவாக முன்னேறினார். 'யார்டா இந்த பிகரு புதுசா இருக்கு' என்று இளசு முதல் பெருசு வரை ஜொள்ளு வடிக்கும் அளவுக்கு ஒரு பெண்ணாக மாறி காதலியை பார்க்க வீறுநடை போட்டார் அந்த இளைஞன்.

விக்'கால் வந்த வினை
ஆனால் 'விக்'கால் அவருக்கு வினை வந்து சேர்ந்தது. எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடக்க தலையில் உட்கார மறுத்து நழுவி கீழே விழுந்தது விக். அதுதான் தனது வேலையை சரியாக செய்யாமல் காட்டி கொடுத்தது என்றால், துப்பட்டாவும் கீழே சரிந்து அவர் மீது அங்கு இருந்தவர்கள் சந்தேக பார்வை பார்க்க காரணமாக இருந்தது.

கல்யாண விருந்து என்ன தெரியுமா?
ஆனாலும் அவர் தலையில் முக்காடு போட்டு சமாளிக்க முயற்சித்தாலும், இறுதியில் அனைவரின் விசாரணையால் அவரது வேடம் வெளிச்சசத்துக்கு வந்து விட்டது. தான் பெண் அல்ல, ஆண் என்று தனது பிளாஷ்பேக்கை கூறினார் அந்த இளைஞன். இதனை தொடர்ந்து மணப்பெண்ணின் உறவினர்கள் அவருக்கு கல்யாண விருந்தாக தர்ம அடியை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதே வேளையில் பெண் கோலத்தில் இருந்தபோது அவரை சைட் அடித்தவர்கள் 'ச்சீ.. இவன் ஆணா.. இப்படி ஏமாந்துட்டோமே' என்று புலம்பியபடி சென்றனர்.












Click it and Unblock the Notifications