25 ரொட்டி, ஒரு தட்டு சாப்பாடு.. பணியில் தூங்கியதற்காக போலீஸ் கொடுத்த வினோத விளக்கம்!
25 ரொட்டி, ஒரு தட்டு சாப்பாடு.. பணியில் தூங்கியதற்காக போலீஸ் கொடுத்த வினோத விளக்கம்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பயிற்சி நேரத்தில் தூங்கியதற்காக, போலீஸ்காரர் ஒருவர் அளித்துள்ள வினோதமான காரணம் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் தூக்கமும் ஒன்று. சிலருக்கு படுத்ததும் தூக்கம் வரவில்லையே என்ற கவலை என்றால், சிலருக்கு வயிற்றில் சிறிது உணவு விழுந்து விட்டாலே தூக்கம் கண்களைச் சுற்றுகிறதே என்ற கவலை. வீட்டில் இருக்கும்போது அப்படி சாப்பிட்டதும் குட்டித் தூக்கம் போட்டால் பரவாயில்லை. ஆனால், பணியில் இருக்கும்போது தூங்கி விட்டால்?
அப்படித்தான் பணி நேரத்தில் தூங்கி பிரச்சினையில் சிக்கி இருக்கிறார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர். தனது தூக்கத்திற்கான காரணமாக அவர் எழுதியுள்ள காரணம்தான் சமூகவலைதளங்களில் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

பணி நேரத்தில் தூக்கம்
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில்தான் இந்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று பயிற்சியில் இருந்த தலைமைக் காவலர் ராம் ஷரீப் யாதவ் என்பவர் பணி நேரத்தில் அசந்து தூங்கி விட்டார். இது அவரது உயரதிகாரிகளின் காதுகளுக்கும் சென்று விட்டது.

விளக்கக் கடிதம்
வழக்கம்போல, நடந்த தவறுக்கான காரணத்தை விளக்கக் கடிதமாக அளிக்கும்படி ராம் ஷரீப்பிற்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவை ஏற்றுக் கொண்ட, அவரும், 'உள்ளதை உள்ளபடி சொல்கிறேன்..' என தனது தூக்கத்திற்கான காரணத்தை ஒரு கடிதமாக எழுதி இருக்கிறார். அந்தக் கடிதம்தான் தற்போது சமூகவலைதளங்களில் எப்படியோ லீக்காகி விட்டது.

சாப்பாடு இல்லை
அந்தக் கடிதத்தில் அவர், "தாதுபூரில் நடக்கும் பயிற்சிக்காக லக்னோவில் இருந்து சென்றிருந்தேன். எனது பயணம் கடினமானதாக இருந்ததால், நிறைய கஷ்டங்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. முறையாக சாப்பாடும் கிடைக்கவில்லை, தூங்கவும் முடியவில்லை.

வயிறாற சாப்பிட்டேன்
ஆகையால் மறுநாள் காலையில் 25 ரொட்டிகளையும், ஒரு தட்டு நிறைய சாப்பாடும், கூடவே நிறைய காய்கறிகளையும் சாப்பிட்டேன். வயிறு நிறைய உணவு சாப்பிட்டதால், அசதியில் நன்றாக தூங்கி விட்டேன். இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்" என வெளிப்படையாக தனது தூக்கத்திற்கான காரணத்தை ராம் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் ஆச்சர்யம்
இந்தக் கடிதப் புகைப்படம்தான் தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பெரும்பாலும் அலுவலகங்களில் அல்லது பணி நேரத்தில் தூக்கம் வருவதற்கு முக்கியக் காரணம் வயிற்றில் நல்ல சப்பாடு விழுவதுதான். ஆனால், அதையே காரணமாக ராம் தனது விளக்கக் கடிதத்தில் கூறியிருப்பது நெட்டிசன்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications