உபி தேர்தல்..15 நாட்களில் 6 மெகா பேரணிகள்.. நேரடியாக களத்தில் இறங்கும் பிரதமர்.. பாஜக மாஸ்டர் பிளான்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் மட்டும் அங்கு 6 மிகப் பெரிய பேரணிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 7 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் தவிர மற்ற 6 மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது.
பிரதமர் மோடி மக்களவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலம் என்பதால் அனைவரது எதிர்பார்ப்பும் உத்தரப் பிரதேசத்தின் மீதே உள்ளது.
உத்தரப் பிரதேச தேர்தல்
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப் பெரியளவில் வென்றது. மொத்தமுள்ள 403 இடங்களில் 312 இடங்களைக் கைப்பற்றி அசுர வெற்றியைப் பெற்றது பாஜக. அதன் பின்னரே உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டார். அதேபோல மக்களவை தேர்தலிலும் உத்தரப் பிரதேசம் மிக மிக முக்கியமான ஒரு மாநிலம்.
2019 மக்களவை தேர்தல்
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்தலில் உபியில் மட்டும் பாஜக 62 இடங்களை கைப்பறிறயது. எனவே, அடுத்து 2024 மக்களவை தேர்தலிலும் உத்தரப் பிரதேசம் தான் பாஜகவின் டாப் குறியில் ஒன்றாக இருக்கும். 2024 மக்களவை தேர்தலை மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்து எதிர்கொள்ள வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.
என்ன நிலை
இதுமட்டுமின்றி பிரதமர் மோடி வென்ற வாரணாசி தொகுதி உள்ளதால் இமேஜ் விஷயமாகவும் கருதுகிறது. பாஜக தலைமை. உபி முதல்வர் யோகி மீது கடந்த ஆண்டு வரை பெரியளவில் அதிருப்தி எதுவும் இல்லாமலேயே இருந்தது. இருப்பினும், கொரோனா 2ஆம் அலையை மோசமாகக் கையாண்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைச் சமாளித்து மீண்டும் மிகப் பெரிய வெற்றியைப் பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது பாஜக.
மெகா யாத்திரைகள்
இந்நிலையில் பொதுமக்களைக் கவரும் வகையில் உபி-இல் யாத்திரைகளை நடத்தவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. இந்த யாத்திரைக்கான பெயர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், 'விஜய் சங்கல்ப் யாத்ரா' என்ற பெயரில் இந்த யாத்திரை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் ஆறு யாத்திரைகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் மிக விரைவில் யாத்திரைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் பிளான்
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் என்று இல்லை, அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் சமயத்தில் யாத்திரையை நடத்துவதை பாஜக வழக்கமான ஒன்றாகவை வைத்துள்ளது. தமிழ்நாட்டில் கூட சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் வேல் யாத்திரை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த யாத்திரை வரும் டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் ஒவ்வொரு யாத்திரையும் 12-13 நாட்கள் வரை இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
30 நாட்களில்
ஒவ்வொரு யாத்திரையையும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் யாரேனும் ஒருவர் தொடங்கி வைப்பார். அதன் பிறகு மற்ற நாட்களில் எந்த சட்டசபை தொகுதியின் வழியே செல்கிறதோ அங்குள்ள பாஜக தலைவர்கள் யாத்திரையை வழிநடத்துவார்கள். அனைத்து யாத்திரைகளும் வரும் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் தலைநகர் லக்னோவில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 15 நாட்களில் 6 மிகப் பெரிய பேரணிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது
களத்தில் இறங்கும் பிரதமர் மோடி
தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி அடுத்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை உத்தரப் பிரதேசம் செல்லவுள்ளார். முதலில் முதல்வர் யோகியின் சொந்த தொகுதியான கோரக்பூரில் உரத் தொழிற்சாலையைத் திறந்து வைக்கச் செல்கிறார். அதன் பிறகு அவரது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான காசி விஸ்வநாத் வழித்தடத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உபி செல்கிறார்.