உபி-இல் யோகிக்கு செக்.. மோடியின் தளபதி ஏகே சர்மாவுக்கு துணை தலைவர் பதவி.. அடுத்துகட்ட திட்டம் என்ன
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் தளபதியாக கருதப்படும் ஏகே சர்மா, அம்மாநில பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா பரவலை பாஜக கையாண்ட விதத்தைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்,
இதனால் உத்தரப் பிரதேச தேர்தல் என்பது பாஜகவுக்கு ஒரு அக்னி பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம்
அடுத்தாண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜகவைப் பொருத்தவரை உத்தரப் பிரதேசம் மிக முக்கியமான ஒரு மாநிலமாகும். 2019 மக்களவை தேர்தலில் அங்கு மட்டும் பாஜக 62 இடங்களைக் கைப்பற்றியது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தல் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.
அதிருப்தி
தற்போது உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் கோபத்தில் உள்ளனர். அவர் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதாகவும் அவர் அதிகாரிகளின் பேச்சுகளைத் துளியும் காது கொடுத்துக் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்துத் தேர்தல்களிலும்கூட பாஜக விரும்பிய முடிவுகளைப் பெற முடியவில்லை.
திடீர் பரபரப்பு
கடந்த சில வாரங்களுக்கு முன்புகூட உத்தரப் பிரதேசத்தில் தற்போதுள்ள நிலை குறித்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தனித்தனியாக தங்கள் ரிப்போர்ட்டை அனுப்பினர். இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச முதல்வர் பதவியிலிருந்து யோகி ஆதித்யநாத் நீக்கப்படலாம் எனச் செய்திகள் வெளியானது. இந்தச் செய்தி வெளியானதும் டெல்லி சென்ற யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நாட்டா ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
துணைத் தலைவர்
இந்தச் சூழ்நிலையில், பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராகக் கருதப்படும் ஏகே சர்மாவுக்கு உத்தரப் பிரதேச பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏகே சர்மா கடந்த ஜனவரி மாதம் தான் பாஜகவில் இணைந்தார். கட்சியில் அவர் இணைந்து சில மாதங்களிலேயே முக்கிய பதவி அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு செக் வைக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
ஏகே சர்மா
ஏகே சர்மா என்று அழைக்கப்படும் அரவிந்த் குமார் சர்மா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. இவர் பிரதமர் மோடிக்காக தனது ஐஏஎஸ் பதவியையே ராஜினாமா செய்தவர். மேலும், உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்கள் வாக்கும் கணிசமாக உள்ளது. ஏகே சர்மா வருகை பிராமணர்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் பாஜகவுக்குப் பெற்றுத் தரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.