யோகிக்கு பறந்த "லெட்டர்".. ஐசியூவில் துடிக்கும் உயிர்கள்.. தேசமே நினைவு கூறும் கஃபீல்கான் "உருக்கம்"
உபி முதல்வர் யோகிக்கு டாக்டர் கஃபீல் கான் கடிதம் எழுதி உள்ளார்
லக்னோ: "செத்து கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தன்னை மறுபடியும் பணியில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் கஃபீல்கான் உபி முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு லெட்டர் எழுதி உள்ளார்.. . "கொரோனா சரியான பிறகு வேண்டுமானால் மறுபடியும் உங்க இஷ்டம்போல என்னை சஸ்பெண்ட் செய்துவிடுங்கள்" என்றும் டாக்டர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது உபி மாநில மக்களை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
யார் இந்த கஃபீல்கான்?
கடந்த 2017ம் ஆண்டு.. அப்போதுதான் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று 5 மாதங்கள் ஆகியிருந்தன.. அப்போது, கோரக்பூரில் உள்ள பிஆர்டி ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து உயிரிழந்தனர்...
குறிப்பாக, ஒரே நாளில் ஒரே ராத்திரியில் 23 குழந்தைகள் பரிதாபமாக சுருண்டு விழுந்து இறந்ததை கண்டு இந்தியாவின் சுவாசமே தடுமாறி போய்விட்டது.
மே மாதத்தில் கொரோனா உச்சம்.. அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்- ஆணையர் பிரகாஷ்
சிலிண்டர்
எனினும், இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலரை அந்த ஆஸ்பத்திரி டாக்டர் கஃபீல் கான் காப்பாற்றினார். அதுமட்டுமல்ல, அந்த ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிலவியபோது, சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி தந்து, அதன்மூலமும் ஏராளமான குழந்தைகளின் உயிரைக காப்பாற்றியவர் கபீல் கான். இதனால் அனைவரின் பாராட்டையும் கஃபீல்கான் வெகுவாக பெற்றார்..
சிறை தண்டனை
ஆனால், உபி அரசோ, தன் மீதான தவறை மறைக்க அப்படியே டாக்டர் கஃபீல்கான் மீதே பழியை திருப்பி போட்டது.. குழந்தைகள் இறக்க அவர்தான் காரணம் என்று பிரதானமாக குற்றஞ்சாட்டியது.. அவரை கைது செய்து ஜெயிலும் அடைத்தது... இது சம்பந்தமான நீண்டதொரு சட்ட போராட்டத்தை கஃபீல் கான் கையில் எடுத்தார்.. அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தவறானது என்று நிரூபிக்கப்பட்டது. இறுதியில் ஆகஸ்ட் மாதம் விடுதலையானார்.. அதுவும் சுப்ரீம் கோர்ட் தலையிட்ட பிறகே விடுதலை செய்யப்பட்டார்.. எனினும் இப்போது வரை இவரை பணியில் சேர்த்து கொள்ளப்படவில்லை.
வன்முறை
அதேசமயம், மத்திய அரசின் தவறுகளை கஃபீல் கான் சுட்டிக்காட்டாமல் இருந்ததில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராடியபோது, கஃபீல் கான் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார் என்று சொல்லி, அவரை மறுபடியும் ஜெயிலில் தூக்கி போட்டது உபி அரசு. அந்தக் கைது சட்டவிரோதமானது என்று ஹைகோர்ட் அதிரடி உத்தரவிட்டது.
சஸ்பென்ட்
அதேசமயம், அவருடன் சேர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மற்ற 2 டாக்டர்களை யோகி அரசு மீண்டும் வேலையில் சேர்த்து விட்டது. கஃபீல் கானை மட்டும் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் தன்னை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் கஃபீல் கான். தற்போது அவர் சுயமாக ஒரு டாக்டர்கள் குழுவுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
15 வருட அனுபவம்
இதுதொடர்பாக யோகி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒரு டாக்டர் என்ற முறையிலும், மிகுந்த சமூக அக்கறை கொண்டும், அம்மாநில முதல்வருக்கு கோரிக்கை வைத்து ஒரு லெட்டர் எழுதியுள்ளார் கஃபீல்கான்... அதில், "என்னை மறுபடியும் பணியில் சேர்த்து கொள்ள வேண்டும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வாய்ப்பு தர வேண்டும்... காரணம், எனக்கு ஐசியூ சிகிச்சை பிரிவில் 15 வருஷம் அனுபவம் இருக்கிறது... அந்த அனுபவத்தை வைத்து பல உயிர்களை என்னால் காப்பாற்ற முடியும்.. கொரோனா சரியான பிறகு வேண்டுமானால், திரும்பவும் என்னை சஸ்பெண்ட் செய்துவிடுங்கள்" என்று அனுமதி கேட்டு, உபி முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
விண்ணப்பம்
இதற்கு முதல்வர் அலுவலகம் பதிலளித்துள்ளது.. அதில், முறைப்படி கஃபீல் கான், அரசு இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இந்திய மெடிக்கல் அசோசியேஷனும் கஃபீல் கான் மீதான பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சிஸ்டம்
இதனிடையே கஃபீல் கான் இதுசம்பந்தமாக ஒரு பேட்டி தரும்போது, "நாடு கடுமையான சவாலை தற்போது எதிர்நோக்கியுள்ளது... இந்த கொரோனா காலத்தில் கடந்த ஒரே வருஷத்தில் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் இறந்துவிட்டார்கள்.. அதிலும் உத்தரப்பிரதேசத்தின் சிஸ்டம் ரொம்ப மோசமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
அனுமதி?
இப்போது டாக்டர் எழுதிய அந்த கடிதத்துக்கு அனுமதி கிடைக்குமா? அதன்மூலம் பல உயிர்களை கஃபீல்கான் காப்பாற்ற வாய்ப்பு கிடைக்குமா? அல்லது மீண்டும் அரசியல் காழ்ப்புணர்ச்சி தலைதூக்கப்படுமா? என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!