மலிவு விலை டேட்டா வயிற்று பசியை போக்குமா? பிரதமர் நரேந்திர மோடி மீது பாய்ந்த அகிலேஷ் யாதவ்
லக்னோ: ‛‛இந்தியாவில் மலிவு விலையில் இணைய சேவை(டேட்டா) கிடைப்பது என்பது ஒருவரின் பசியை ஒருபோதும் போக்காது. இந்திய மக்களுக்கு தற்போதைய தேவை என்பது மலிவு விலை அரிசி, பருப்பு, எரிபொருட்கள் தான்'' என பிரதமர் நரேந்திர மோடியை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.
உத்தர பிரதேசம், கேவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்தல் நடந்தது.
இதில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்தது. மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை தக்க வைத்தது. இதனால் பாஜகவினர் மகிழ்ச்சியடைந்தனர்.

எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி
உத்தர பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்ததால் யோகி ஆதித்யநாத் 2வது முறையாக முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்த தேர்தலில் 100க்கும் அதிகமான இடங்களில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களிடம் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். தற்போத சமாஜ்வாதி கட்சி உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

அகிலேஷ் யாதவ் விமர்சனம்
மாநில அரசியில் ஆர்வம் காட்டும் நோக்கத்தில் அகிலேஷ் யாதவ் தனது எம்பி பதவியை ராஜினமா செய்தார். இதையடுத்து அவர் உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் தொடர்ச்சியாக மத்திய, மாநில பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சனம் செய்து வருகிறார்.

மோடி மீது விமர்சனம்
இந்நிலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல் நாளான நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் புலம்பெயர் இந்தியர்கள் மத்தியி் பேசினார். அப்போது அவர் இந்தியாவில் இணைய சேவைகள் மலிவாக கிடைப்பதாக பெருமையாக கூறினார்.இதை தான் தற்போது அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.

வயிற்று பசியை போக்குமா?
அதாவது பிரதமர் நரேந்திர மோடி பேசிய 42 வினாடிகள் கொண்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு விமர்சனம் செய்துள்ளார். அதி, ‛‛இந்தியாவில் ஒருவரின் வயிறு காலியாக பசியில் இருக்கும்போது மலிவு விலை இணைய சேவை வழங்குவதன் மூலம் அவருக்கு என்ன செய்ய முடியும்?. ஒருவருக்கு மலிவான பெட்ரோல், டீசல், எரிவாயு, பருப்பு, அரிசி, எண்ணெய், நெய் மற்றும் மாவு தேவை. வெறும் இணைய சேவை மட்டுமே ஒருவரின் பசியை போக்காது. பணக்காரர்கள் உங்களுக்கு கைதட்டுவது, ஏழைகள் உங்களுக்கு சேவை செய்வது ஆகிய இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். இதனை புரிந்து கொள்ள வேண்டும்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications