பாஜகவை விட்டு விலகிய மாஜி அமைச்சர் தாராசிங் சவுகான் அகிலேஷ் கட்சியில் இணைந்தார்!
லக்னோ: பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க.) இருந்து விலகிய உ.பி. முன்னாள் அமைச்சர் தாராசிங் சவுகான் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். மேலும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அப்னா தள் கட்சியின் ஆர்.கே.வர்மாவும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
உச்சம்.. மக்களுக்கு பறந்த வார்னிங்.. அடுத்த 3 வாரங்கள் மிக முக்கியம்- கொரோனாவால் பீதியாகும் கேரளா!
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
உ.பி.கள நிலவரம் என்ன?
உத்தரப்பிரதேச தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. 2017 தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக 100க்கும் மேற்பட்ட இடங்களை இழந்தாலும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். அதேநேரத்தில் சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியை தரக் கூடும் என்றும் அக்கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்து ராஜினாமா
ஆனால் இக்கருத்து கணிப்புகளை தலைகீழாக்கும் வகையில் புதிய திருப்பங்கள் உ.பி. அரசியலில் நிகழ்ந்து வருகின்றன. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அவர்கள் பாஜகவை விட்டும் வெளியேறினர். உ.பி.யில் இதுவரை மொத்தம் 12 எம்.எல்.ஏக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான அப்னா தள் ஆகியவற்றில் இருந்து வெளியேறி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சியில் தாராசிங் சவுகான்
முன்னாள் அமைச்சர்கள் ஸ்வாமி பிரசாத் மவுரியா, தரம்சிங் சைனி ஆகியோர் சமாஜ்வாதி கட்சியில் நேற்று இணைந்தனர். இந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் தாராசிங் சவுகானும் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். அப்னா தள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. வர்மாவும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இந்த இணைப்பு விழா லக்னோவில் நடைபெற்றது.
பாஜக மீது அட்டாக்
இந்நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ், தாராசிங் சவுகான், ஆர்கே வர்மாவை வரவேற்கிறோம். இந்த தேர்தலானது டெல்லிக்கும் லக்னோவுக்குமானது. பாஜகவுக்கு பிரிவினைவாத அரசியல்தான் செய்ய தெரியும். வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்கிற அரசியல் கொள்கை பாஜகவிடம் இல்லை என்றார். தாராசிங் சவுகான், உ.பி.யில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களில் ஒருவர். லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்தவர். யோகி ஆதித்யநாத் அரசில் சுற்றுப்புற சூழல் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் தாராசிங் சவுகான்.