ஹத்ராஸ் வன்கொடுமை - ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க கோரிக்கை
ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் சகோதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
லக்னௌ: ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயலில் புல் அறுக்கச்சென்ற 19 வயதான பட்டியல் இன இளம்பெண்ணை 4 பேர் கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த கொடூரத்தை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக இளம்பெண்ணை கடுமையாக தாக்கினர். இதில் அந்த இளம்பெண்ணின் கழுத்து பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது.
அந்த கும்பலின் தாக்குதலில் முதுகெலும்பு முறிந்து படுகாயம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண், ரத்த வெள்ளத்தில் வயல்வெளிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண் கடந்த கடந்த 29ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரியங்காவின் குர்தாவை இழுத்த விவகாரம் - பல மணிநேரத்திற்குப் பின் மன்னிப்பு கேட்ட உ.பி மாநில போலீஸ்
இளம் பெண் உடல் தகனம்
உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை சொந்த ஊர் கொண்டு வந்த காவல்துறையினர், அந்த பெண்ணின் குடும்பத்தாரை வீட்டில் அடைத்து வைத்து விட்டு உடலை காவல்துறையினரே தகனம் செய்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் போராட்டம்
இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையுடம் பொதுமக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை பத்திரிக்கையாளர்களும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சந்திக்க முற்பட்டனர். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்கவோ அல்லது அந்த கிராமத்திற்கு செல்லவோ உத்தரபிரதேச போலீசார் அனுமதி வழங்காமல் இருந்தனர். பின்னர் ஊடகங்கள், எதிர்க்கட்சிகளின் தொடர் கண்டனங்களை பதிவு செய்யவே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க போலீசார் அனுமதியளித்தனர்.
குடும்பத்தினருக்கு மிரட்டல்
இதற்கிடையில், இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினரை மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் சில காவல் அதிகாரிகள் மிரட்டியது போன்ற வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆறுதல் சொன்ன பிரியங்கா
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். அக்டோபர் 3ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினர். அதனைத் தொடர்ந்து ஹாத்ரஸ் மாவட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வழக்கில் அவரது பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
|
ட்விட்டரில் பிரியங்கா
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். அவருக்கு பெரிய பதவிகள் எதுவும் வழங்கப்படக் கூடாது. எங்கள் ஒப்புதல் பெறாமல், எங்கள் மகளின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தது ஏன்?. எங்களுக்கு ஏன் மிரட்டல் விடுக்கப்படுகிறது? எரிக்கப்பட்ட உடல் எங்கள் மகளின் உடல் தான் என்பதை நாங்கள் எப்படி நம்புவது?
இறந்த பெண்ணின் குடும்பத்தினரின் இக்கேள்விகளுக்கு உத்தரபிரதேச அரசு பதிலளிக்க வேண்டும் என அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை
இதற்கிடையில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கோரிக்கை விடுத்துள்ளார். தங்கள் குடும்பத்தினரை மிரட்டும் வகையில் நடந்துகொண்ட ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.