ஒரு சில மக்களிடம் தடுப்பூசி பயம் இருப்பது ஏன்? தீர்வுதான் என்ன? மருத்துவ நிபுணர்கள் சொல்வதை பாருங்க
லக்னோ: தடுப்பூசி செலுத்த தொடங்கிய ஒரு ஆண்டுக்கு பிறகும் ஒரு சில மக்களிடையே தடுப்பூசி பற்றிய பயம் போகவில்லை. : தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
Recommended Video
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. புதிது, புதிதாக வைரஸ் மாறுபாடு அடைந்து மனிதர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.இந்த வகையில் சமீபத்திய புதிய வைரஸ் ஓமிக்ரான். இந்த வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்து விட்டது.

கொரோனா ஆதிக்கம்
ஓமிக்ரான் வைரஸ் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிவேகமாக உள்ளது. கடந்த 2 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 3.50 லட்சம் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கொரோனாவை தடுக்கும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான். இதனால்தான் உலக நாடுகள் விரைவாக தடுப்பூசி செலுத்தி வருகின்றன.

தடுப்பூசி மிக முக்கியம்
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய 3 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு ஆகிறது. தடுப்பூசி போடுவதற்கு முதலில் தயக்கம் காட்டிய மக்கள் அதன்பிறகு பாதிப்பை உணர்ந்து ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

தடுப்பூசி மீதான பயம்
ஆனாலும் தடுப்பூசி செலுத்த தொடங்கிய ஒரு ஆண்டுக்கு பிறகும் ஒரு சில மக்களிடையே தடுப்பூசி பற்றிய பயம் போகவில்லை. தடுப்பூசி மீதான வதந்தி காரணமாக பலர் இன்றும் தடுப்பூசி போட வருபவர்களை கண்டாலே பயந்து ஓடுகின்றனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் தடுப்பூசிக்கு பயந்து ஒருவர் மரத்தில் ஏறி இருக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மரத்தில் ஏறிய நபர்
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவ அதிகாரிகள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சென்றனர். அப்போது இதனை பார்த்த ஒரு நபர் தடுப்பூசி செலுத்துவதை தவிர்ப்பதற்காக மரத்தின் மீது ஏறினார். அதிகாரிகள் குழுவினர் அந்த நபரை கீழே வரும்படி கூறினார்கள். ஆனாலும் அந்த நபர் கீழே வருவதற்கு அடம்பிடித்தார். அப்போது அதிகாரி அவரை கிழே இறக்கும்படி உத்தரவிட்டார்.

வலுக்கட்டாயமாக கீழே இறக்கினார்கள்
இதனை தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் மரத்தில் பதுங்கி இருந்த நபரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினார்கள். பின்னர் அவரிடம் தடுப்பூசியின் பயன்கள் குறித்தும், தடுப்பூசி மீதான வதந்தி குறித்தும் தெளிவாக விளக்கினார்கள். அதன்பிறகு அந்த நபர் தடுப்பூசி போட சம்மதம் தெரிவித்தார். அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் பல்லியா மாவட்டத்தில் உள்ள படகோட்டி ஒருவரும் தடுப்பூசி செலுத்த தயங்கினார்.

படகோட்டியின் மிரட்டல்
படகோட்டி அவரை தண்ணீருக்குள் இழுத்து செல்ல முயன்றார். ஆனாலும் அதிகாரிகள் படகோட்டியை விடாமல் மடக்கி பிடித்து அவருக்கு தடுப்பூசி செலுத்தினார்கள். தடுப்பூசி குறித்து எடுத்துகூறியபோது படகோட்டி அதன்பின்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோவும் பரவி வருகிறது.

'ஆண்மை குறைவு ஏற்பட்டு விடும்'
நாட்டில் தடுப்பூசி போட தொடங்கி தற்போது 2-வது டோஸ், பூஸ்டர் டோஸ் வரை வந்துவிட்டது. ஆனாலும் ஒரு சிலரிடையே தடுப்பூசி மீதான பயம், வதந்தி ஆகியவை நீங்கவில்லை. நாம் மேலே பார்த்த இரண்டு சம்பவம் மட்டுமில்ல; தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தடுப்பூசிக்கு ஒரு சில மக்கள் பயந்து ஓடும் சம்பவங்கள் நடந்துள்ளன. ''தடுப்பூசி போட்டால் உயிர் போய் விடும்'', ''ஆண்மை குறைவு ஏற்பட்டு விடும்'' என்பது போன்ற விதவிதமான வதந்திகள் மக்களிடையே விதைப்பதுதான் இதற்கு காரணம்.

பயத்தை விரட்ட என்ன வழி?
பெரும்பாலும் குக்கிராமங்களில் இந்த வதந்திகள் எளிதில் பரவுகின்றன. இந்த வதந்தியை அடித்து விரட்டி இப்படிப்பட்ட மக்கள் மனதில் தடுப்பூசியை விதைப்பதற்கான ஒரே வழி விழிப்புணர்வுதான என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ஒரு குக்கிராமத்துக்கு அதிகாரிகள் தடுப்பூசி செலுத்த சென்றால், அதற்கு முன்னதாக மருத்துவ குழுவினர் அந்த கிராமத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவ நிபுணர்கள் கூறுவது இதுதான்
அதாவது தடுப்பூசியின் பயன்கள் என்னென்ன? தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி உருவாக்கும்? இதனால நமக்கும், குழந்தைகளுக்கும் என்ன நன்மைகள்? தடுப்பூசி போடாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கிராம மக்களிடம் தெளிவாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு கொடுத்த பிறகு தடுப்பூசி செலுத்த சென்றால் மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள் என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications