"யோகி ஆதித்யநாத் வேற லெவல் ஆட்சி.. பாலியல் சம்பவங்கள் பாதியாகக் குறைந்துள்ளன.." அமித் ஷா புகழாரம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், உள் துறை அமைச்சர் அமித் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், அடுத்து வரும் பிப்.27ஆம் தேதி 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு இப்போது யோகி ஆத்தியநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. கடந்த 2017இல் பெற்றதை போல மாபெரும் வெற்றியைப் பெற பாஜக தீவிர முயற்சியை எடுத்து வருகிறது.

உத்தரப் பிரதேசம்
இதற்காக பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு பாஜக தலைவர்களும் உத்தரப் பிரதேசத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்தச் சூழலில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா உத்தரப் பிரதேசத்தில் பிரதாப்கரில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, உத்தரப் பிரதேசத்தில் இருந்த "மாஃபியா" ராஜ்ஜியத்தை யோகி அரசு முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும், வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

குற்ற சம்பவங்கள்
இது தொடர்பாக அமித் ஷா மேலும் கூறுகையில், "யோகி ஆட்சியில் திருட்டு சம்பவங்கள் 72 சதவிகிதம் குறைந்துள்ளது. கொள்ளை சம்பவங்கள் 62 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல கொலைகள் 31 சதவிகிதமும், கடத்தல் சம்பவங்கள் 29 சதவிகிதமும் குறைந்துள்ளது. குறிப்பாக பலாத்கார சம்பவங்கள் 5 ஆண்டுகளில் 50 சதவிகிதம் குறைந்துள்ளது. 5 ஆண்டுகளில் பாஜக அரசின் தீவிர நடவடிக்கைகளால் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் முந்தைய சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆட்சியில் கிரிமினல்கள், மாஃபியாக்களின் ஆட்டம் அதிகமாக இருந்தது. அதை பாஜக அரசு குறைத்துள்ளது.

சிறையில் உள்ளனர்
கிரிமினல்கள் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் . சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் இப்போது சிறையில் உள்ளனர். அதுவே அந்த இரு அரசுகள் மாஃபியாக்களுக்கு எந்தளவு ஆதரவாக இருந்தனர் என்பதற்கு ஒரு சாட்சி. மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், சிறையில் இருக்கும் மாஃபியாக்கள் மீண்டும் வெளியே வந்து பொதுமக்களைத் துன்புறுத்துவார்கள் எனவே, இந்தச் சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்துங்கள், அப்போது தான் இப்போது வெளியே உள்ள குற்றவாளிகளையும் கூட சிறைக்கு அனுப்ப முடியும்.

ரூ 2000 கோடி
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, மாஃபியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ₹2000 கோடி மதிப்பிலான பொது நிலங்களை பாஜக அரசு மீட்டு, ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்த போது, மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளாக மக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கியது. அதேபோல யோகி ஆதித்யநாத் அரசு மக்களுக்குப் பருப்பு, எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றை இலவசமாக அளித்தார்" என்றார்.

மின் கட்டணம் ரத்து
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய அரசு விவசாய சட்டங்களை வாபஸ் பெற்றுவிட்ட போதிலும் விவசாயிகள் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனிடையே விவசாயிகளைக் கவரும் வகையில், இந்தத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைந்தால், எந்த விவசாயியும் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications