தலித் என்பதால் மரியாதை இல்லை! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏ! யோகி அரசுக்கு தர்மசங்கடம்
லக்னோ: தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தனது துறை அதிகாரிகள் தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி உத்தரப் பிரதேச நீர்வளத்துறை அமைச்சர் தினேஷ் காதிக் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்தது. அதுமட்டுமல்லாமல் 37 ஆண்டுகளுக்கு பின் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து 2வது முறையாக ஒரு கட்சி ஆட்சி அமைத்தது. இதனால் பாஜக மீது ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தது.

அமைச்சர் ராஜினாமா
ஆனால் அட்சியமைத்து நான்கு மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சர் தினேஷ் காதிக் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தலித் என்பதால் பாரபட்சம்
இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் தினேஷ் காதிக், நீர் வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முக்கிய கூட்டங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை. தனக்கென்று எந்தப் பணிகளும் கொடுக்கப்படுவதில்லை. தான் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கும் எந்த அதிகாரிகளும் செவி சாய்ப்பதும் இல்லை. தொலைபேசியில் பேசினால் கூட முதன்மைச் செயலாளர் கேட்பதில்லை.
அமைச்சர் என்பதால் மட்டுமே தனக்கு ஒரு கார் கொடுக்கப்பட்டுள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் ஓரங்கட்டப்படுகிறேன். ஒரு மாநில அமைச்சராக தனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் அமைச்சராக பணியாற்றுவதால், தலித் சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை. இது தலித் சமூகத்தை அவமதிக்கும் செயல். இதனால் தான் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு
இதோடு நீர்வளத்துறையில் செய்யப்பட்ட இடமாற்றம் மற்றும் நமாமி கங்கா திட்டம் ஆகியவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இருந்தும் பாஜக மேலிட நிர்வாகிகள் தரப்பில் இருந்து அமைச்சர் தினேஷ் காதிக்கின் ராஜினாமாவை திரும்பப் பெற வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் பொதுப் பணித்துறையில் நடைபெற்ற அதிகாரிகள் இடமாற்றத்தில் ஊழல் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் சார்பாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. அதோடு மாநிலத்தின் முக்கிய அமைச்சராக உள்ள ஒருவரே சாதி ஒடுக்குமுறை பிரச்னையை முன்வைத்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யோகி நடவடிக்கை
இதுதொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதன் பின்னர் பொதுப்பணித்துறையை சேர்ந்த 5 முக்கிய நிர்வாகிகளை இடைநீக்கம் செய்து யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதனால் பொதுப்பணித்துறை அமைச்சர் ஜிதின் பிரசாதா மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அமைச்சரவையில் மாற்றம்?
இதனைத்தொடர்ந்து அமைச்சர் ஜிதின் பிரசாதாவை நேரில் அழைத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஜிதின் பிரசாதா, டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் நிகழலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications