உ.பி. தேர்தல்: சின்ன சான்ஸையும் விட்டுக்கொடுக்காத அகிலேஷ் யாதவ்.. யாரோடு கூட்டணி தெரியுமா?
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் திடீர் திருப்பமாக அகிலேஷ் யாதவ் தனது சித்தப்பா சிவ்பால் யாதவின் பி.எஸ்.எல்.பி. கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
லக்னௌ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் திடீர் திருப்பமாக பி.எஸ்.எல்.சமாஜ்வாதி கூட்டணி உறுதியாகியுள்ளது. அகிலேஷ் யாதவ் தனது சித்தப்பா சிவ்பால் யாதவின் பி.எஸ்.எல்.பி. கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பது அவ்வப்போது நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பரம வைரியாக கருதிய சித்தப்பா சிவ்பால் யாதவுடன் கரம் கோர்த்து சட்டசபை தேர்தலை சந்திக்கப்போகிறார் அகிலேஷ் யாதவ்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெல்ல பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்கட்சி என்ற மூன்று பெரும் கட்சிகளும் மும்மரமாக உள்ளன. பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியும் இம்மாநிலத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
'தடுப்பூசி போடாமல் ஊர் சுற்றுகிறார்'.. அகிலேஷ் யாதவை கடுமையாக தாக்கி பேசிய யோகி ஆதித்யநாத்!
சமாஜ்வாதி கூட்டணி
இந்த தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன், சிறிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று கூறினார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். சொன்னதோடு மட்டுமல்லாமல் பல சிறிய கட்சிகளுடன் அவர் கூட்டணியை உறுதி செய்து விட்டார்.
கூட்டணி உறுதி
தனது சித்தப்பா சிவ்பால் யாதவின் பி.எஸ்.எல்.பி. கட்சியுடன் கூட்டணி குறித்து அகிலேஷ் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று மாலை அகிலேஷ் யாதவ் தனது சித்தப்பா சிவ்பால் யாதவின் வீட்டுக்கு சென்றார். அங்கு சுமார் 45 நிமிடங்கள் சிவ்பால் யாதவும், அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
அகிலேஷ் ட்விட்டர் பதிவு
இதனையடுத்து பி.எஸ்.எல்.-சமாஜ்வாடி கூட்டணி உறுதியானது. இதனை சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பி.எஸ்.எல். தேசிய தலைவர் சிவ்பால் சிங் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து, கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். பிராந்திய கட்சிகளை அழைத்து செல்லும் கொள்கை தொடர்ந்து வலுவடைந்து, சமாஜ்வாடி மற்றும் பிற கூட்டாளிகளை வரலாற்று வெற்றிக்கு இட்டுச் செல்கிறது என்று பதிவு செய்து உள்ளார்.
புதிய கட்சி தொடங்கிய சிவ்பால் யாதவ்
2017ம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தாப்பா சிவ்பால் யாதவுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இறுதியில் சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் நியமிக்கப்பட்ட உடன் இருவர்களுக்கு இடையிலான உறவு மோசமடைந்தது.
அரசியல் கணக்கு
சிவ்பால் யாதவ் சமாஜ்வாடியிலிருந்து விலகி பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி லோஹியா (பி.எஸ்.எல்.பி.) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தங்களின் கட்சியில் இருந்து விலகிய சித்தப்பா உடன் சமதானமாக பேசி இப்போது கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்திக்கப் போகிறோர் அகிலேஷ் யாதவ். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
வெல்வது யார்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமாக 80 எம்.பி இடங்கள் உள்ளன. அதுபோல 403 சட்டமன்ற உறுப்பினர் இடங்களும் உள்ளன, அதிக எம்எல்ஏக்களை இம்மாநிலத்தில் வென்றால் அதிக மாநிலங்களவை உறுப்பினர்களை பெறமுடியும். அசுரபலத்துடன் கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலிலும் வெற்றியை தக்கவைப்பதற்கான காய்களை நகர்த்தி வருகிறது. ஆட்சியை பிடித்து முதல்வராக வேண்டும் என்ற முனைப்போடு கூட்டணிக்கான காய்களை நகர்த்தி வருகிறார் அகிலேஷ் யாதவ். வெற்றி யார் வசம் என்பது இன்னும் சில மாதங்களில் தெரியவந்து விடும்.