'தாலிபான்கள் ஆதரவு லூஸ் டாக்'...உ.பி.யில் ஜோராக ஒன்றுதிரளும் இந்துக்கள் வாக்குகள்.. பாஜக செம ஹேப்பி!
லக்னோ: ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்களுக்கு ஆதரவான குரல்கள் உத்தரப்பிரதேசத்தில் அதிகரித்துள்ளன. இத்தகைய குரல்களால் இந்துக்களின் வாக்குகள் பாஜகவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்தமாக கிடைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
Recommended Video
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) ஆட்சியை தக்க வைப்பதில் மும்முரமாக இருக்கிறது. உ.பி.யில் கொரோனா 2-வது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.

பாஜக அரசு மீது அதிருப்தி
கொரோனா 2-வது அலையை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு சரியாக கையாளவில்லை என்கிற அதிருப்தி அம்மாநிலத்தில் கடுமையாக இருக்கிறது. ஏற்கனவே யோகி ஆதித்யநாத் ஆட்சி மீது பொதுவான அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக உ.பி.யில் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்து வரும் பிராமணர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இதனால் பிராமணர்கள் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் உத்திகளை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
இன்னொரு பக்கம் டெல்லியில் 8 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம். டெல்லி- ஹரியானா- உத்தரப்பிரதேசம் மூன்றும் அண்டை மாநிலங்கள். ஹரியானாவிலும் உ.பி.யிலும் பா.ஜ.க. ஆட்சிதான் நடந்து வருகிறது. ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், விவசாயிகள் போராட்டத்தை மிக மிக கடுமையாக எதிர்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கொடூரமான முறையில் போலீசார் அடக்குமுறையை ஏவிவிட்டனர். இதில் விவசாயிகள் மண்டைகள் உடைக்கப்பட்டன. இத்தகைய சம்பவங்களால் பாஜக மீது மிக கடுமையான கோபத்தை காட்டி வருகின்றனர் விவசாயிகள். இந்த கோபமும் உ.பி. சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்றே கூறப்படுகிறது.

தாலிபான்கள் ஆதரவு பேச்சு
இப்படி நாலா பக்கமும் பாஜகவுக்கு எதிரான நிலைதான் இருந்து வந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசமான பின்னர் உ.பி. தேர்தல் களமும் மெல்ல மெல்ல மாறத் தொடங்கிவிட்டது. ஆம்.. உ.பி.யில் தாலிபான்களுக்கு ஆதரவான குரல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமாஜ்வாதி கட்சி லோக்சபா எம்.பி. ஷபிக்குர் ரஹ்மான் பராக் அண்மையில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியா போராடி சுதந்திரம் பெற்றது. அதேபோல்தான் தாலிபான்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடுகின்றனர். ஆப்கானிஸ்தானை வெளிநாட்டவரின் பிடியில் இருந்து விடுபட போராடி வருகின்றனர் தாலிபான்கள். இந்த போராட்டத்தில் தாலிபான்கள் வென்றுவிட்டனர். இதில் எந்த தவறும் இல்லை என கூறியது பெரும் சர்ச்சையானது. தாலிபான்கள் அமைப்பு இந்தியாவில் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக ஷபிக்குர் ரஹ்மான் பராக் மீது வழக்கு போடப்பட்டது. உ.பி.யை சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயலாளர் மவுலானா உம்ரைன் மஹ்ஃபுஸ் ரஹ்மானி, அதன் தேசிய செய்தித் தொடர்பாளர் மவுலானா சஜ்ஜத் நோமானி ஆகியோரும் தாலிபான்களுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டுள்ளனர். மவுலானா உம்ரைன் மஹ்ஃபுஸ் ரஹ்மானி தமது ட்விட்டர் பக்கத்தில், தாலிபான்கள் வசமாகும் ஆப்கான். ஏனெனில் முடிவுகள் சொர்க்கத்தில்தான் எடுக்கப்படுகின்றன என குறிப்பிட்டிருந்தார். உ.பி.யை சேர்ந்த உருது கவிஞர் முனாவ்வர் ராணவும் தாலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். தாலிபான்கள், பயங்கரவாதிகள் அல்ல எனவும் அவர் கூறியிருந்தார். இந்த கருத்துகள் உ.பி. அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தன.

ஸ்வரா பாஸ்கர் கருத்து
இன்னொரு பக்கம் தாலிபான்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், இந்துத்துவா சித்தாந்தத்தை பயங்கரவாதம் என ட்விட்டரில் பதிவு போட்டார். ஸ்வரா பாஸ்கர் தமது ட்விட்டர் பக்கத்தில், தலிபான் பயங்கரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது. இந்தியாவில் இந்துத்துவா தீவிரவாதமும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது என கூறினார். உடனே பாஜக ஆதரவாளர்கள் பெரும் கொந்தளிப்பை காட்டிவிட்டனர். நடிகை ஸ்வரா பாஸ்கரை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் செய்தனர்.

விளாசிய யோகி
இதுதான் சந்தர்ப்பம் என தாலிபான்கள் ஆதரவு விவகாரத்தை கையில் எடுத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத். உ.பி. சட்டசபையில் இது தொடர்பாக பேசிய யோகி ஆதித்யநாத், குழந்தைகளையும் பெண்களையும் கொடூரமாக கொலை செய்யும் தாலிபான்களை சிலர் ஆதரித்து பேசுகின்றனர். தாலிபான்களுக்கு ஆதரவாக வெட்கமே இல்லாமல் பேசுகின்றனர். நமது சமூகத்தையும் தாலிபான்மயமாக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இத்தகைய சக்திகளை பொதுமக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என ஆவேசத்தை காட்டினார்.

பாஜக ஆதரவாக திரளும் இந்து வாக்குகள்
இவை மட்டுமல்லாது தாலிபான்களின் முந்தைய ஆட்சியில் நடந்த அட்டூழியங்களின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. தாலிபான்கள் ஷரியா சட்டமானது எப்படி எல்லாம் குழந்தைகள், பெண்களுக்கு எதிரானது என்கிற விவாதமும் களைகட்டி இருக்கிறது. தாலிபான்கள் சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள். ஷியா முஸ்லிம் பிரிவுக்கு எதிரானவர்கள். இதனால் இயல்பாகவே தாலிபான்கள் ஆதரவு குரல்களுக்கு எதிர்முகாமுக்கு ஷியா முஸ்லிம்கள் தள்ளப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலைகள் அனைத்தும் அதாவது தாலிபான்களுக்கு ஆதரவு அல்லது விமர்சனம் என்ற பெயரில் தெரிவிக்கப்படும் கருத்துகள், இந்துத்துவா பயங்கரவாதம் என பேசுவது அனைத்துமே இன்னொரு பக்கத்தில் இந்துக்களின் வாக்குகளை ஒன்று திரட்டி அசால்ட்டாக பாஜக பக்கம் தள்ளிவிடுகிறது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications