''பிரதமர் மோடியுடன் கருத்து வேறுபாடா..'' டிவி சேனலிடம் மனம் திறந்து பேசிய யோகி ஆதித்யநாத்
லக்னோ: பிரதமர் மோடியுடன் கருத்து வேறுபாடு உள்ளதா என்ற கேள்விக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபைத் தொகுதிகளுக்கும் வரும் 10ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. மீண்டும் பாஜக-வை வெற்றி பெற வைக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் பாஜக-வினர். பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஜாதி அரசியல், அதிகாரம் மூலம் மிரட்டல்- என் வேட்புமனு கதி? யோகி மீது சந்திரசேகர ஆசாத் பாய்ச்சல்
யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். தற்போது முதல்வராக இருந்தாலும், ஒரு வேட்பாளராக தேர்தலை யோகி சந்திப்பது இதுவே முதல்முறை. இதையடுத்து கோரக்பூர் நகரமே விழாக்கோலம் பூண்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா அருகிலிருக்க, கோரக்பூர் தொகுதியில் நேற்று தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் யோகி ஆதித்யநாத்.
பேட்டி
வேட்புமனுத்தாக்கல் செய்ததும், தனியார் டிவி சேனலுக்கு பேட்டியளித்தார் யோகி ஆதித்யநாத். அப்போது, ''பிரதமர் மோடிதான் எங்கள் பாதுகாவலர். என்னுடைய பாதுகாவலருடன் எனக்கு எந்த கருத்து முரண்பாடும் இல்லை. நாங்கள் எல்லோரும் பிரதமர் மோடியின் வழிநடத்தலின்படியே வேலை செய்கிறோம். மோடிதான் எங்களுடைய வழிகாட்டி. பிரதமர் மோடி போன்ற ஒரு தலைவர் கிடைத்தது இந்த நாட்டுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
காங்கிரஸ்
என்னுடைய வேட்புமனுத் தாக்கலுக்கு அமித்ஷா வந்திருந்தார். அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றி. எல்லோருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு உரிமை உள்ளது. அதேநேரம் இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியுடன் சேர்ந்து எத்தனை பேருடைய இறுதி அத்தியாயம் எழுதப்படப்போகிறது என்பதை தேர்தல் முடிவின்போது பார்க்கப்போகிறோம். காங்கிரஸின் தலையெழுத்து மார்ச் 10-ம் தேதி மூடப்படும்.
சமாஜ்வாதி
2019-ம் ஆண்டு தேர்தலில் எல்லோருடைய கருத்துக் கணிப்பும் தவறு என்று நிரூபிக்கப்பட்டது. சமாஜ்வாடி கட்சி வன்முறையின் மீது நம்பிக்கைவைத்துள்ளது. ராமரின் பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதன் காரணமாக யாரும் சமாஜ்வாடியை மன்னிக்க மாட்டார்கள். சமாஜ்வாதி கட்சி குண்டர்களின் கட்சி, தற்போதைய ஆட்சியில் வன்முறை குறைந்திருக்கிறது'' என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.