'எல்லாரிடமும் கார் இருக்கா என்ன? 95% மக்கள் பெட்ரோலே யூஸ் பண்ணல..' பாஜக அமைச்சரின் வினோத விளக்கம்
லக்னோ: பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, நாட்டின் 95% மக்களுக்கு பெட்ரோலே தேவையில்லை என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார் உபி அமைச்சர் ஒருவர்!
இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே பெட்ரோல் விலை ரூ 100ஐ தாண்டிவிட்டது.
அடுத்ததாக மெல்ல அதிகரித்து வந்த டீசல் விலையும் தற்போது சதமடிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் டீசல் விலையும் ரூ 100ஐ தாண்டிவிட்டது.

பெட்ரோல் டீசல் விலை
டீசல் விலை அதிகரித்து வருவதால் சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் செலவும் அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட சில எரிபொருட்கள் மீது மாநில அரசுகள் விதித்துள்ள வரியை ஓரளவு குறைந்துள்ளன. இதேபோல மத்திய அரசும் எரிபொருட்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பெட்ரோலே தேவையில்லை
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, நாட்டின் 95% மக்களுக்கு பெட்ரோலே தேவையில்லை என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார் உபி அமைச்சர்! மேற்கு உத்திர பிரதேசத்தில் உள்ள ஜலாவுனில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக அமைச்சர் உபேந்திர திவாரி, "நீங்கள் 2014-க்கு முன்பும், இப்போது இருக்கும் புள்ளி விவரங்களை எடுத்துப் பாருங்கள். பிரமதர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகியின் சிறப்பான ஆட்சியால் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது.

வேக்சின் போடுகிறோம்
இந்த அரசிடம் குறை கூற எதிர்க்கட்சிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால்தான் இதையெல்லாம் பெரிய விஷயமாக மாற்ற முயல்கின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலையைப் பொறுத்தவரை, இப்போது நாட்டில் சிலரிடம் மட்டுமே நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன. நாட்டில் தற்போது 95 சதவிகித பேருக்கு பெட்ரோல் தேவையில்லை. மத்திய அரசு 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இலவசமாக கோவிட் சிகிச்சையும் வழங்கியுள்ளது. மருந்துகளையும் வீடு வீடாக விநியோகிக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

பெட்ரோலிய துறை அமைச்சர்
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் ஏற்கனவே தத்தளித்து வரும் மக்களுக்கு இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது மற்றொரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் விலைகள் திடீரென உயர்ந்துள்ளதால், அதிக போக்குவரத்து செலவுகள் காரணமாகப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. முன்னதாக இம்மாத தொடக்கத்தில் பெட்ரோலிய துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி கூறுகையில், "மத்திய அரசு இலவச தடுப்பூசியைக் கொடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுக்குப் பணம் தேவை. வேக்சினுக்கு நாங்கள் பணம் வசூலிப்பதில்லை. அதற்கான பணத்தை இப்படித்தான் வசூலிக்கிறோம்" என்று அவர் கூறினார்.

என்ன காரணம்
கொரோனா காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் குறைந்தது. அந்த காலகட்டத்தில் மத்திய அரசு கூடுதலாக வரியை விதித்தது. இந்த வரியின் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை தற்போது விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதை முற்றிலுமாக மறுத்துள்ள மத்திய அரசு சர்வதேச சந்தை காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ. 103.61, டீசல் விலை ரூ.99.59க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications