தலைவிரித்தாடும் கொரோனாவுக்கு மத்தியில்.. உ.பியில் இன்று முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் உத்தரப்பிரதேச அரசு இன்று முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப் பதிவை நடத்தி வருகிறது.
நாட்டில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று. உத்தரகாண்ட் கும்பமேளாவுக்கு செல்ல இயலாதவர்கள் வாரணாசி கங்கை நதியில் புனித நீராட திரள்கின்றனர். இதனால் வாரணாசி புனித நகரில் பல லட்சம் பேர் நாள்தோறும் திரள்கின்றனர்.
கொரோனா பாதிப்பு அதிகம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 20,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இம்மாநிலத்தில் தற்போது 1,11,835 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் அடங்குவர்.
பாஜக அரசு அலட்சியம்
இப்படி கொரோனா காட்டுத் தீயாக பரவுவதால் பஞ்சாயத்து தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இத்தனைக்கும் பாஜக எம்.பி. கெளசல் கிஷோர் உள்ளிட்ட ஆளும் கட்சி தலைவர்களும் இதனை வலியுறுத்தினர். ஆனால் உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசோ கொரோனாவைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் இன்று பஞ்சாயத்து தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவை நடத்தி வருகிறது.
4 கட்ட பஞ்சாயத்து தேர்தல்
உத்தரப்பிரதேசத்தில் இன்று முதல் மொத்தம் 4 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஏப்ரல் 19,26, 29 தேதிகளில் அடுத்த கட்ட தேர்தல்கள் நடைபெறும். இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
போட்டியிடும் கட்சிகள்
இன்றைய முதல் கட்ட தேர்தல் 18 மாவட்டங்களில் நடைபெறுகிறது. பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ், ஓவைசி கட்சி, ஆம் ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பஞ்சாயத்து தேர்தல்கள் என்பதால் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சுயேட்சை சின்னங்களில் இவர்கள் போட்டியிடுகின்றனர்.