கொரோனா கட்டுப்பாடுகளுடன் உ.பி. தேர்தலை நடத்துங்க- தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்
லக்னோ: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலான கட்டுப்பாடுகளுடன் உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று அம்மாநில அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியதாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது. ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

உ.பி.யில் ஆலோசனை
இந்த நிலையில் 5 மாநில தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுஷில் சந்திரா உள்ளிட்டோர் அடங்கிய குழு லக்னோவில் இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் போது அனைத்து அரசியல் கட்சிகளும் கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையக் குழுவிடம் வலியுறுத்தினர் என சுஷில் சந்திரா கூறினார்.

கொரோனா வழிகாட்டுதல்கள்
லக்னோவில் செய்தியாளர்களிடம் சுஷில் சந்திரா கூறியதாவது: கொரோனா பரவல் தொடர்பாக உ.பி. மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது உரிய வழிகாட்டுதல் நடைமுறைகளும் அறிவிக்கப்படும். உ.பி. சட்டசபை தேர்தலில் வாக்குப் பதிவு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேர்தல் பணியாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக நியமிக்கப்படுவர்.

வாக்குப் பதிவு குறைவு
2017 உ.பி. சட்டசபை தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகி இருந்தன. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 59% வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவுகள் குறைவான அளவு இருந்தது கவலைக்குரியது. அனைத்து வாக்கு சாவடிகளிலும் யாருக்கு வாக்கு செலுத்தப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியும். 1 லட்சம் வாக்கு சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும். 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் என வாக்குச் சாவடிகளுக்கு வர இயலாதவர்கள் வீடுகளுக்கு சென்று வாக்குகள் பெறப்படும்.

தேர்தல் நடத்த கோரிக்கை
இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து கட்சியினரும் கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் உரிய நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். உ.பி. சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும். இவ்வாறு சுஷில் சந்திரா கூறினார்.












Click it and Unblock the Notifications