உ.பி.யில் ஊரடங்கை மீறியதாக போலீசார் மிருகத்தனமான தாக்குதல்.. 17 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கொரோனா ஊரடங்கை மீறியதாக 17 வயது சிறுவன் மீது போலீசார் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில், அவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் 2ஆம் அலையின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டிலுள்ள பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்திலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் மே 24ஆம் தேதி வரை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஊரடங்கு அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம்
இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறியதாக 17 வயது சிறுவன் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் போலீசார் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
17 வயது சிறுவன்
பங்கர்மாவ் பகுதியில் 17 வயது சிறுவன், ஊரடங்கு விதிகளை மீறி, அவரது வீட்டின் அருகே காய்கறிகளை விற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், அந்த சிறுவனை காவல் நிலையத்திற்குப் பிடித்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் மீது போலீசார் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் அச்சிறுவனின் உடல்நிலை மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
மிருகத்தனமாக தாக்குதல்
இதையடுத்து போலீசார் அவரை அருகிலிருந்த சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அதற்குள்ள அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசாரின் மிருகத்தனமான தாக்குதல் காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
2 பேர் சஸ்பெண்ட்
மேலும், போலீசாரின் செயலை கண்டித்து பொதுமக்கள் மிகப் பெரியளவில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இரண்டு கான்ஸ்டபிள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், மேலும், ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட காவல் துறை உறுதியளித்துள்ளது.