வேலை வாய்ப்புகளை வழங்குவதில் உத்தரப் பிரதேசம் தான் டாப்! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். பாஜக ஆட்சி காலத்தில்தான் இந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் வேலை வாய்ப்புகள் குறித்து பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

கோரக்பூரில் உள்ள மதன் மோகன் மாளவியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த விழாவில் அவர் தொடர்ந்து பேசியதாவது, "அரசின் திறன் மற்றும் பயிற்சித் திட்டங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு இளைஞர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன். முன்பு இருந்ததை போன்ற சூழல் இப்போது கிடையாது. நிலைமை மாறியிருக்கிறது. வேலை வாய்ப்பு விஷயத்தில் பாஜக அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இளைஞர்கள் தாங்கள் விரும்பும் துறைக்கு முறையான பயிற்சி பெற்றால் வேலை நிச்சயம் கிடைக்கும்.
ஒவ்வொரு வயலுக்கு தண்ணீர் சென்று சேர்வதும், ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் கனவு. 2014 இல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பிரதமர் மோடி தொடர்ந்து கனவுகளை நிஜமாக மாற்றி, எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் வேலைகளை வழங்கி வருகிறார். நமது மாநிலத்தில் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டம் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியை கொடுத்திருக்கிறது. அதேபோல முதலீட்டாளர்கள் உச்சி மாநாடும் வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications