உ.பியில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க.. வேகம் காட்டும் யோகி ஆதித்யநாத்..காலியிடங்களை நிரப்ப உத்தரவு
லக்னோ: சைபர் கிரைம் போலீஸ் படைப்பிரிவு தலைமை அதிகாரியுடன் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். இதில், சைபர் கிரைம் போலீஸ் படைப்பிரிவு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முழு விவரங்களையும் தயார் செய்யுமாறு அறிவுறுத்தினார்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். தற்போது சைபைர் கிரைம் எனப்படும் இணையதள மோசடிகள் அதிகரித்து வருவதால் இத்தகைய குற்றங்களை தடுக்கும் வகையில் சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் காலியாக உள்ள 373 பணியிடங்களை நிரப்ப யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் படைபிரிவு தலைமை அதிகாரியுடன் ஆலோசனை நடத்திய யோகி ஆதித்யநாத், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முழு விவரங்களையும் தயார் செய்யுமாறு அறிவுறுத்தினார். மேலும் சைபர் கிரைம் போலீஸ் பிரிவுக்கு சொந்தமான தனி அலுவலக கட்டிடம் அமைக்கவும் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் சைபைர் கிரைம் குற்றங்களை இன்னும் கூடுதல் வேகத்துடன் கண்காணிக்க முடியும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி கூறியதாவது:- உத்தர பிரதேசத்தில் தற்போது குற்றங்கள் பதிவாவது கணிசமாக குறைந்து உள்ளது. மாநிலத்தில் குற்றங்களை குறைக்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் 2020 ஆம் ஆண்டு 11,170 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2022 ஆம் ஆண்டில் 7 ஆயிரம் வழக்குகளாக குறைந்தது. நடப்பு ஆண்டில் மார்ச் வரையில் 1,500 வழக்குகள் பதிவாகியிருக்கிறது.
குற்றங்களை ஒடுக்குவதில் எந்த சகிப்புத்தன்மையும் காட்டக்கூடாது என்ற யோகி அரசின் புதிய கொள்கையின் படி, சைபர் கிரைம் துறை சார்பில் தெளிவான திட்ட வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் நிரப்புதல், சொந்தமாக அலுவலக கட்டிடம் ஆகியவை மட்டும் இன்றி சைபைர் கிரைம் குற்றங்களை கண்காணிக்க தேவையான உபகரணங்கள் வழங்கப்படுவதும் உறுதி செய்யப்படும்.

முதல்வருடனான ஆலோசனையின் போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு முதல் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பொறுப்பு வரை 373 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக இந்த விவரங்களை அரசிடம் சமர்பிக்குமாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications