உ.பியில் பிரமாண்ட ஜவுளி பூங்கா! சர்வதேச அளவுக்கு தரம் உயரும் லக்னோ.. யோகி ஆதித்யநாத் பெருமிதம்
உத்தரப் பிரதேசத்தில் ரூ.1,200 கோடியில் பிரமாண்ட ஜவுளி பூங்கா அமைய உள்ள நிலையில் யோகி ஆதித்யநாத் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ரூ.1,200 கோடி செலவில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியானது இரண்டு மடங்காக இருக்கும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்திற்கு புதிய திட்டங்களை யோகி அதித்யநாத்தும், மத்திய அரசும் தொடர்ந்து அறிவித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என ஆளும் பாஜக அரசு மாநிலத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக அரசு நிதியை ஒதுக்கியிருந்தது.

மேலும், உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் லக்னோவை சர்வதேச அளவில் தரம் உயர்த்துவது, மாவட்ட தலைநகரங்களை சரியான முறையில் கட்டமைப்பது, மாநிலம் முழுவதும் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்தல், வீடுகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வெளியேற்றும் பாதைகளை சரி செய்தல் என எல்லாவற்றிற்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலையை மறுபரிசீலனை செய்வது, திட்டங்கள் முடிக்கப்படவில்லையெனில் அதற்கான காரணத்தை கண்டறிந்து இடர்பாடுகளை களைவது என மாநிலம் முழுவதும் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டிதான் இப்பணிகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், "கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் மாநிலத்தில் குண்டர்கள் மற்றும் மாஃபியாக்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போதுதான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. எனவே இதனை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது" என யோகி ஆதித்யநாத் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மாநிலத்திற்கு புதிய ஜவுளி பூங்கா அமைய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மாநில தலைநகரான லக்னோவில் இந்த பூங்கா சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இதற்காக மத்திய அரசு தரப்பில் ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்கா 'பிரதம மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் அப்பேரல் பார்க்(PM MITRA)' எனும் திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகிறது. இது உத்தரப் பிரதேசத்திற்கு மட்டுமல்லாது தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் என ஆறு மாநிலங்களிலும் அமைய இருக்கிறது.
இந்த பூங்கா குறித்து மத்திய அரசுக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தின் 25 கோடி மக்கள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பூங்கா மூலம் மாநிலத்தின் வளர்ச்சியானது இரண்டு மடங்காக அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications