மதுரையில் சீராக உயரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. கவலை தரும் மாற்றங்கள்
மதுரை: மதுரை மாவட்டத்தில், ஒரே நாளில் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த ஒரு வாரத்தில் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 மாதங்களாக குறைந்து வரும் மதுரையில் தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக சீராக அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
செப் .16 அன்று 17 ஆகவும், செப் .17 அன்று 20 ஆகவும், செப் .18 அன்று 15 ஆகவும், செப் .19 அன்று 14 ஆகவும் தினசரி கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால் செப்டம்பர் 20 அன்று 27 ஆக உயர்ந்தது.
செப் .21 அன்று 21 ஆகவும், 22 ஆம் தேதி, 23 பேர் ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்தது.

எப்படி இருக்கிறது
மதுரையில் செப்டம்பர் 23ம் தேதி 7351 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 0.4 சதவீதம் என்கிற அளவிற்கு பாதிப்பு உள்ளது. கொரோனா இரண்டாவது அலையால் மதுரையில் இதுவரை 53,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 52,179 பேர் குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு அதிகம்
கொரோனா இரண்டாவது அலையில் மட்டும் 713 பேர் இறந்துள்ளனர். மதுரையில் இரண்டு அலையிலும் சேர்த்து இதுவரை 74445 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 73026 பேர் குணம் அடைந்தனர். இரண்டு அலையிலும் சேர்த்து இதுவரை 1163 பேர் உயிரிழந்துள்ளனர்.

மக்கள் உணரணும்
கொரானாவிற்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட மக்களும் கொரோனா ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கொரோனா பாதிப்பின் அதிகரிப்பு மூன்றாவது அலையின் தாக்கத்தை உணரத் தொடங்கியுள்ளதாகவும், மக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பு விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கண்காணிக்க கோரிக்கை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் 100 வார்டுகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், வழிகாட்டுதல்களை கண்காணிப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோவை, சென்னை, ஈரோட்டில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம் கோவை, தஞ்சை, கிருஷ்ணகிரியில் பாதிப்பு சதவீதம் 2 சதவீதம் அளவிற்கு உள்ளது.












Click it and Unblock the Notifications