முருகனின் அறுபடை வீடுகளிலும் ஆடிக்கிருத்திகை கோலாகலம்..பால்குடம் சுமந்த பக்தர்கள்
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
மதுரை: ஆடிக்கிருத்திகை பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் காவடி சுமந்தும் பால்குடங்கள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் சாமி திரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை தினத்தன்று முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இன்று ஆடி மாத கார்த்திகை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆடி மாத கார்த்திகை தினம் மற்றும் வார விடுமுறை காரணமாக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து விளாபூஜை, சிறுகாலசந்தி பூஜை நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பொதுதரிசனம், சிறப்பு, கட்டணம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் ரோப்கார் சேவை வருடாந்திர பராமரிப்புப்பணி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மின்இழுவை ரயில்நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் மூன்றாவது மின்இழுவை ரயிலும் இன்று பழுது ஏற்பட்டு திடீரென நிறுத்தப்பட்டதால் இரண்டு மின் இழுவை ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.ஏற்கனவே ரோப்கார் இல்லாத நிலையில் தற்போது மின்இழுவை ரயிலும் ஒன்று பழுதானதால் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும்நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறானி பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிநாதசுவாமி திருக்கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடுடான, சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் கட்டுமலை கோவிலான இதில், 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம், மேலும் தந்தை சிவபெருமானுக்கே ஓம் எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து உபதேசம் செய்து, சுவாமிக்கே நாதன் ஆனதால், இங்கே முருகப்பெருமான் சுவாமிநாத சுவாமி என போற்றப்படுகிறார்
Recommended Video
இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக நடைபெறுவது வழக்கம், இந்நிலையில் கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூலவர் சுவாமிநாத சுவாமி தங்க கவசம் வைரவேலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் சுவாமியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர் தொடர்ந்து இன்றிரவு திருக்கோயிலின் நேத்திரபுஷ்கரணி என்ற திருக்குளத்தில் தெப்போற்சவமும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.