“அந்த சிரிப்பை பாருங்கப்பா... சிரிப்பே ஒரு அழகு” மேடையில் இபிஎஸ்-ஐ வெட்கப்பட வைத்த செல்லூர் ராஜு!
மதுரை: மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் சிரிப்பை பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது தொண்டர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, முதல்முறையாக தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவரது வருகையையொட்டி மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக மாநகர், புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதுவரை இதுபோல் மூன்று மாவட்ட செயலாளர்கள் சேர்ந்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை.

மதுரையில் முதல்முறை
ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுகவின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே மூன்று மாவட்டங்கள் சார்பிலும் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் வருகையின் போது அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும் பேசுபொருளானது.

பிரம்மாண்ட வரவேற்பு
அதேபோல் மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக சார்பாக தொண்டர்களால் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலக்கோட்டையில் இருந்து வழிநெடுகிலும் தொண்டர்கள் சூழ்ந்திருந்தனர். இதற்காக பிரத்யேக வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை முழுவதும் தொண்டர்களை அழைத்து வந்திருந்தனர்.

செல்லூர் ராஜூ பேச்சு
இந்த நிலையில் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, எடப்பாடி பழனிசாமியின் சிரிப்பை பற்றி பேசியது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தையும், வரவேற்பையும் பெற்றது. அவர் பேசுகையில், மதுரையில் இன்று ஒரு அற்புதமான கூட்டம். கூட்டம் என்று சொல்வதைவிடவும் மாநாடு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி அண்ணனை வரவேற்க தொண்டர்கள் மாநாடு போல் குவிந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

வெட்கப்பட்ட இபிஎஸ்
அப்போது எடப்பாடி பழனிசாமியை கொண்டாடும் வகையில், நம்ம கதாநாயகன், தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு சிரிப்போடு உட்கார்ந்திருக்கிறார். சிரிப்பே ஒரு அழகு, அங்க பாரப்பா என்று கூறிய போது, எடப்பாடி பழனிசாமியே வெட்கப்பட அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் சிரிப்புக்கு முன் எல்லா தலைவரும் ஜீரோ தான். எல்லோரும் எடப்பாடியார் என்று அழைக்கிறார்கள். மதுரை மண் என்றும் அதிமுகவின் கோட்டை என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications