மாப்ளே.. எங்கய்யா இங்க இருந்த மக்களை காணோம்.. இப்படி வெறிச்சோடி கிடக்கே நம்ம மதுரை!
வெறிச்சோடி காணப்படுகிறது மதுரை மாநகரம்
மதுரை: மாப்ளே.. நம்ம மதுரையா இது? ஒரே நாளில் இப்படி மாறி போயிடுச்சேப்பா.. என்ற புலம்பல்கள் தூங்கா நகரத்தில் இருந்து எழுந்தபடி உள்ளன!
Recommended Video
மதுரை - தொன்மையான நகரம்.. தமிழும், கலையும் தழைத்தோங்கிய நகரம்... இந்த கோயில் நகரத்துக்கு தூங்காநகரம் என்றும் பெயர் உண்டு!
மதுரை மீனாட்சி கண்ணை கூட சிமிட்டாமல், ஒரு நிமிஷம்கூட தூங்காமல் ஊர்மக்களை காப்பாற்றுகிறாள் என்பதற்காகவே இந்த பெயர் வந்ததாக ஆன்மீக காரணம் சொல்லப்படுகிறது... அதேபோல சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இரவும் பகலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.. வெளியூர்களில் இருந்து பழங்கள் கொள்முதல் செய்ய ராத்திரி நேரத்தில்தான் வியாபாரிகள் குவிவார்கள்.

மீன் மார்க்கெட்
கரிமேடு மீன் மார்க்கெட் பகுதியும் இப்படித்தான்.. இதனாலேயே டீக்கடைகள் விடிய விடிய திறந்தே கிடக்கும்... நள்ளிரவு மட்டுமல்ல.. விடிகாலையிலும் தாராளமாகவே கிடைக்கும் பரோட்டா, இட்லி, குடல் குழம்பு, கொத்து பரோட்டாவும்கூட தூங்கா நகரின் சிறப்பு ஆகும்! இப்படிப்பட்ட மதுரைதான் இன்று முடங்கி போயுள்ளது.. கொரோனா பீதி காரணமாக ஒட்டுமொத்த மதுரையே களையிழந்துவிட்டது!!

பெரியார் பஸ் ஸ்டேண்ட்
"மல்லி மல்லி, வெள்ளரிக்காய் வேணுமா, பாப்பா பாத்து இறங்குப்பா , பெரியார்ல தமிழக எண்ணை பலகாரத்துக்கு முன்னால நிக்கிறேன் வந்துருங்க" என்ற பலவித குரல்களின் கூட்டு கலவைகள் காதில் விழுந்து துளைத்தெடுத்த இடமான மதுரை பெரியார் பஸ் ஸ்டேண்ட் இன்று வெறிச்சோடி உள்ளது. பஸ் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.. அதைவிட அந்த பஸ்களில் பயணம் செய்வோரும் குறைந்துவிட்டனர்.

மாட்டுத்தாவணி
எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பஸ் ஸ்டேண்ட்டிலும் ஜனநடமாட்டமே இல்லை.. பஸ்கள் என்னமோ வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.. ஆனால் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது... இந்த பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே 24 மணி நேரமும் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் நின்றிருக்கும்.. ஆனால் பயணத்தை பொதுமக்கள் தவிர்த்து வருவதால் சவாரி கிடைக்காமல் பிழைப்பு போச்சே என்று ஆட்டோ தொழிலாளா்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

கோயில்கள்
தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், ஏன் தொலைந்தவர்களின் காலடிகளை கூட லட்சக்கணக்கில் பாரம் பார்க்காமல் சுமந்த மாவட்டம் மதுரை.. ஆனால் இன்று மொத்தமாக ஒருவித நிசப்தம் நிலவி வருகிறது.. எங்கு திரும்பினாலும் கோயில்களின் கோபுரங்களை காண குவியும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது... ஆனாலும் மீனாட்சி அம்மன் கோயிலில் ஆங்காங்கே கிருமிநாசினி மருந்து அடிக்கப்பட்டு வருகிறது...

ரயில்வே நிலையங்கள்
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும், ஏசி கோச்சில் கம்பளி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முட்டி மோதும் பயணிகள் வெகு சிலரே உள்ளனர்... ஆனால் எல்லா இடங்களிலும் தடுப்பு முன்னெச்சரிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.

ஏர்போர்ட்
அதேபோல, விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.. மதுரை ஏர்போர்ட்டை பொறுத்தவரை பெரும்பாலானோருக்கு அதிக அளவில் கைகொடுத்து வருவது... சிரமத்தை குறைக்கவும், வசதிக்காகவும் ஏராளமானோர் மதுரை ஏர்போர்ட்டில் குவிந்தபடியே இருப்பார்கள்.. ஆனால் இப்போது மக்கள் தலையே காணப்படவில்லை.. இனம்புரியாத குழப்பத்துடன், கலக்கத்துடன் ஒருசிலர் பயணமாகி வருகின்றனர். பாரத் பந்த் நடந்தால் எப்படி ஒரு தோற்றம் தென்படுமோ அப்படித்தான் மதுரையும் இப்போது காணப்படுகிறது!

முன்னெச்சரிக்கை
இதை ஒரு வகையில் நல்ல விஷயமாகவும் பார்க்கலாம். மக்கள் நடமாட்டம் இப்படிக் குறைவதன் மூலம் கொரோனாவைரஸ் பரவுவதும் கூட தடுக்கப்படும். மக்களை இந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும். தேவையில்லாமல் வெளியில் அலைவதைத் தவிர்த்தாலே பாதி பரவலை குறைக்க முடியும் என்றுதான் ஹூ-வும் கூறுகிறது. எனவே மதுரை மக்கள் இதேபோல தொடர்ந்து நடமாட்டத்தைக் குறைத்து தேவைக்கு மட்டும் வெளியில் வருமாறு இருந்து கொள்வது அவர்களை நிச்சயம் காக்கும்... தமிழகத்தின் இதர பகுதிகளிலும் இது போலமக்கள் நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டு நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதே நம் ஆழ்மனசு எதிர்பார்ப்பும்!!












Click it and Unblock the Notifications