இதில் என்ன தப்பு.. தேவர், அம்பேத்கர் புகைப்படத்துடன் பேனர்.. போலீசார் நீக்க சொன்னதால் வாக்குவாதம்!
மதுரை: மதுரையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவர் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரின் புகைப்படங்களையும் வைக்கப்பட்ட பேனரை போலீசார் நீக்க அறிவுறுத்தியது சர்ச்சையாகி இருக்கிறது. அப்போது பேனர் வைத்த நபர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் பரவி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடக்க உள்ளது. இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதனால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் இருந்து காரில் பசும்பொன் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.

அதேபோல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் காவல்துறை தரப்பில் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர் ஒன்று சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது.
அந்த பேனரில் பசும்பொன் தேவர் திருமகனாரின் 118வது ஜெயந்தி விழா.. சாதிய எண்ணம் கொண்டவன் கடவுளை கூட வணங்க தகுதியற்றவன் என்று வார்த்தைகளுடன், தேவர் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பேனரை எடுக்க காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பேனரை எடுக்க முடியாது என்று கூறியதோடு, பேனர் வைத்தவர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், தேவரையும், அம்பேத்கரையும் சேர்த்து போட்டதாலேயே இந்த பிரச்சனை.. மதுரையில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். என்னுடைய வார்டு மக்கள் சார்பாகவே நான் வைத்திருக்கிறேன்.
இந்த தேவர் ஜெந்திக்கு பாலத்தில் மட்டும் 150 பேனர்கள் வைத்துள்ளார்கள். ஆனால் இந்த பேனர் மட்டுமே எடுக்குமாறு போலீசார் கூறுகிறார்கள். அம்பேத்கர் படத்தை தேவர் ஜெயந்திக்கு அடிக்கப்பட்ட பேனரில் போட்டதில் என்ன தவறு? இருவரும் ஒரே கருத்தை தான் கூறி இருக்கிறார்கள். சாதியில் இருந்து கட்டமைக்கட்ட எதுவும் உருப்படாமல் போகும் என்று அம்பேத்கரும், சாதிய எண்ணம் கொண்டவன் கடவுளை கூட வணங்க தகுதியற்றவன் என்று தேவரும் சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications