வழக்கறிஞர் மீது பொய் வழக்கு: டிஎஸ்பி உள்ளிட்ட ஆறு காவலர்களுக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்
வழக்கறிஞர் மீது பொய் வழக்கு பதியபட்டது தொடர்பாக திருவாடனை டிஎஸ்பி உள்ளிட்ட ஆறு போலீசாரை நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை: வழக்கறிஞர் மீது பொய் வழக்கு பதியபட்டது தொடர்பாக திருவாடனை டிஎஸ்பியாக இருந்து தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் டிஎஸ்பி ஆக பணிபுரிந்து வரும் புகழேந்தி கணேஷ் உள்ளிட்ட ஆறு போலீசாரும் 16ஆம் தேதிநேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 10ஆம் வகுப்பு படித்து, எம்.பி.பி.எஸ். டாக்டர் எனக்கூறி கிளினிக் நடத்தி வந்தவர் ராஜலட்சுமியின் தவறான சிகிச்சையால் பாட்டி இறந்ததாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து போலி பெண் டாக்டர் ராஜலட்சுமியை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது டிக்-டாக் நண்பர் சுரேந்திரன், செல்வம், பீட்டர், வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேர் மீதும் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனை தொடர்ந்து நீதிபதி பாலமுருகன் உத்தரவின் பேரில் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து கிளினிக்கில் உள்ள மருந்துகள், மாத்திரைகளை கைப்பற்றிய காவல் துறையினர் அங்கிருந்த மருத்துவச் சான்றிதழை ஆய்வுசெய்தபோது, ஏற்கனவே 1987ஆம் ஆண்டு சென்னையில் மருத்துவக்கல்வி முடித்து தற்போது ஹைதராபாத்தில் மருத்துவராக இருப்பவருடையது என்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜலட்சுமி, தொண்டி காவல்நிலைய போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல்,10 ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கும், சரவண குமார் என்பவருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
2010ஆம் ஆண்டு முதல் சென்னையில் கணவருடன் வாழ்ந்து வந்தேன். என்னை எனது கணவர் சரியாக கவனிக்கவில்லை, அதனால் அவருடன் வாழாமல், காரைக்குடியை சேர்ந்த சுரேந்திரன் என்பவருடன் டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நானும் அவரும் மறைமலை நகரில் வீடு எடுத்து கணவன் மனைவியாக குடித்தனம் நடத்தி வந்தோம்.
2019ஆம் ஆண்டு கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஸ்கின் டாக்டர் என சொல்லி வேலைக்கு சேர்ந்தேன். அதன் பின் தொண்டி அருகே உள்ள கொடி பங்கு கிராமத்தை சேர்ந்த செல்வத்துடன் சுரேந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கொடிப்பங்கு கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றோம். அப்போது தொண்டியில் பெண் டாக்டர் இல்லாததால் இங்கு கிளினிக் வைப்பதற்கு பண வசதி செய்து தருவதாக செல்வம் கூறினார்.
நான் ஸ்கின் கேர் டிப்ளமோ படித்து இருக்கிறேன் என கூறினேன். அதற்கு செல்வம், இங்கு நான் தான் எல்லாம், அதனால் எந்த பிரச்சினையும் வராது என சொன்னார். இதைத்தொடர்ந்து தொண்டியில் செல்வம் கிளினிக் வைத்து கொடுத்தார். என்னை பார்க்க பீட்டர் என்பவர் அடிக்கடி கிளினிக் வந்து செல்வார். செல்வமும், பீட்டரும் பொதுமக்களிடம் நன்றாக சிகிச்சை அளிப்பதாக சொல்லி எனது கிளினிக்கிற்கு பொது மக்களை சிகிச்சைக்காக அனுப்பி வைப்பார்கள்.
இந்நிலையில் செல்வத்திடம் பேசுவதையும் நிறுத்தி விட்டேன். இதனால் செல்வம் என்னை மிரட்ட ஆரம்பித்தார். இதுகுறித்து கடந்த பிப்ரவரி 21ஆம்தேதி செல்வம் என்னை மிரட்டியதாக தொண்டி போலீசில் புகார் செய்தேன். அதன் பின்னர் 23ஆம் தேதி நான் கிளினிக்கிற்கு வந்த போது சுரேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது கிளினிக் முன்பு நின்று கொண்டிருந்தனர்.
நான் போலி டாக்டர் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இதனை ஊரில் சொல்லி விடுவார்களோ என பயந்து பீட்டரிடம் சொன்னேன். அப்போது எனது கிளினிக்கிற்கு வந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது எனது ரூமில் உட்கார்ந்து, செல்வத்திற்கு எதிராக போலீசில் உனக்காக மனு எழுதி கொடுத்தேன். அதற்கு நீ எனக்கு வக்கீல் பீஸ் ரூ.3000 கொடுக்க வேண்டும். ஆனால், நீ எனக்கு ஒரு முத்தம் கொடுத்தால், நான் அந்த காசை உன்னிடம் வாங்கப் போவதில்லை என சொன்னார். மேலும், தனியாக இருந்த என்னை கண்ட இடத்தில கைவைத்து செக்ஸ் டார்ச்சர் பண்ணினார். நானும் பொறுத்துக்கொண்டேன் பின்பு நான் கிளினிக்கை பூட்டிவிட்டு பீட்டரிடம் சென்று உதவி கேட்டேன்.
இதையடுத்து டிராவல்ஸ் மூலமாக ஒரு வண்டியை ஏற்பாடு செய்து என்னையும், சுரேந்தரையும் திண்டுக்கல்லுக்கு அனுப்பி விட்டார். பழனிக்கு சென்றதும் சுரேந்திரனுக்கு மொட்டை போட்டுவிட்டு அங்குள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினோம். பின்பு நான் பீட்டருக்கு போன் செய்து அங்கு நிலவும் சூழ்நிலையை கேட்டேன். அவர் எங்களை வரச்சொன்னதால், அங்கு சென்று வீட்டை காலி செய்து கொண்டிருக்கும் போது போலீசார் வந்து எங்களை வீட்டில் வைத்து கைது செய்தனர். எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த வக்கீல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
போலி மருத்துவர் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர் கலந்தர் ஆசிக்கை காவல்துறையினர் கைதும் செய்தனர். தன் மீது பதியபட்ட பொய் வழக்கை ரத்துக் செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் தொடர்ந்த வழக்கில் புகார் அளித்த பெண் ராஜலட்சுமி, நீதிமன்றத்தில் ஆஜராகி தான் போலீசாரின் வற்புறுத்தலால் புகார் அளித்ததாக தெரிவித்தார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஜெயசந்திரன் திருவாடனை டிஎஸ்பியாக இருந்து தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் டிஎஸ்பி ஆக பணிபுரிந்து வரும் புகழேந்தி கணேஷ் உள்ளிட்ட ஆறு போலீசாரும் 16ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications