மதுரை மக்களுக்கு நல்ல செய்தி.. முடியப்போகும் முக்கிய பாலப்பணி.. மாநகராட்சி தகவல்
மதுரை: மதுரை குருவிக்காரன் சாலை ஆற்றுப்பால பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைகை ஆற்றில் ஒரே நேரத்தில் தரைப்பாலங்களை இடித்து புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வந்தநிலையில் இந்த தகவல் மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் வைகையாற்றின் கரையில் கணேஷ் தியேட்டர் பஸ் ஸ்டாப் - அரவிந்த் கண் மருத்துவமனை இடையே குருவிக்காரன் சாலை தரைமட்ட பாலம் இருந்தது.
75 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் கட்டப்பட்டது. உரிய பராமரிப்பில்லாததால் இந்த பாலத்தின் அடித்தளம் மிகவும் பலமிழந்தது. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றும் நிலை ஏற்பட்டு வந்தது.

மாநகராட்சி முடிவு
எனவே தரைமட்ட பாலத்தை அகற்றி விட்டு, புதிய உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என மதுரை மாநகர பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தரைப்பாலத்தை அகற்றி விட்டு,புதிய உயர்மட்ட பாலம் கட்ட மதுரை மாநகராட்சி முடிவு செய்தது.

200 மீ நீளத்தில் பாலம்
அதன் படி நகர் மற்றும் ஊரகத் திட்ட துறையின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.23.17 கோடி மதிப்பில் குருவிக்காரன் சாலையில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பாலம் 200 மீ நீளம், 17.50 மீ அகலம் மற்றும் இருபுறமும் 1.50 மீ. நடைமேடையுடன் அமைக்கப்படும் என மதுரை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது .

ஓரிரு நாளில் முடியும்
இந்த நிலையில் இதற்கான கட்டுமானப் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய நிலையில் தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் வைகை ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கின் காரணமாக அவ்வப்போது பணிகள் பாதிப்பு ஏற்பட்டாலும் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பணி முழுமையாக முடிக்கப்படும் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் போனது
முன்னதாக மதுரை குருவிக்காரன் சாலைப்பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் ஆற்றுவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. ஒரே ஆண்டில் 3 முறை தற்காலிக தரைப்பாலங்கள் அமைத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அவை ஸ்திரத்தன்மை இல்லாமல் அவசர கோலத்தில் அமைக்கப்பட்டது தான் காரணம் என்ற புகாரும் உள்ளது.

மதுரை மாநகராட்சி தகவல்
வைகை ஆற்றில் ஒரே நேரத்தில் தரைப்பாலங்களை இடித்து புதிய பாலங்கள் அமைப்பதால் மதுரையின் வடகரை மற்றும் தென்கரை பகுதிகள் துண்டிக்கப்பட்டு மக்கள் எளிதாக வைகை ஆற்றைக் கடக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். குருவிக்காரன் சாலை ஆற்றுப்பால பணிகள் ஓரிரு நாளில் முடியும் என மதுரை மாநகராட்சி கூறியிருப்பது மதுரைமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.












Click it and Unblock the Notifications