கல்லூரிக்குள் புகுந்து ஹாஸ்டல் பெண்களிடம் ரகளை.. ஆபாச பேச்சு.. பாய்ந்தது குண்டர் சட்டம்.. சபாஷ்!
மதுரை: மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியை அடுத்த தல்லாகுளத்தில் உள்ள கல்லூரியில் புகுந்து ஹாஸ்டல் மாணவிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியை அடுத்த தல்லாகுளம் என்ற இடத்தில் லேடி டாக் என்ற மகளிர் கல்லுரி உள்ளது.
இந்தக் கல்லூரியில் மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரி வளாகத்திற்குள் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவின் போது இருச்சக்கர வாகனங்களில் வந்த சில இளைஞர்கள் அத்து மீறி நுழைந்தனர்.

மாணவிகளிடம் ஆபாசமாக பேசி..
இதை தடுக்க முயன்ற அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பூமி என்பவரை தாக்கி அவர் மீது பைக்கை ஏற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு விடுமுறை என்றாலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் அங்கு இருந்துள்ளனர். அங்கு இருந்த மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதோடு அநாகரிகமாகவும் நடந்துள்ளனர். இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.

7 பிரிவுகளில் வழக்கு
இது தொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞர்கள் மீது கல்லூரி கண்காணிப்பாளர் பூப்பாண்டி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

10 பேர் கைது
மேலும் இதுதொடர்பாக, மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்ட திருப்புவனத்தை சேர்ந்த சூரியா, முத்து நவேஷ், கோ புதுரை சேர்ந்த அருண் பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டியன், பா.மணிகண்டன், ஆத்திகுளம் முத்து விக்னேஷ், காந்திபுரம் வில்லியம் பிரான்சிஸ், காந்திபுரம் விமல்ஜாய் பேட்ரிக், மது நவீஸ் என 10 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமின் ஜாமீன் கோரி சூர்யா, முத்துநவேஷ், அருண்பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டியன், முத்துவிக்னேஷ், விமல்ஜாய் பேட்ரிக் ஆகியோர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனுவை மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், மகளிர் கல்லூரி வளாகத்திற்குள் பைக்கில் அத்துமீறி நுழைந்து அநாகரிமாகவும் பொது அமைதிக்கு குந்தகமான வகையில் நடந்து கொண்டதாகவும் கைது செய்யப்பட்ட 10 பேரில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
திருப்புவனத்தை சேர்ந்த சூர்யா, மது நவீஸ், கே.புதூரை சேர்ந்த அருண், அருண் பாண்டியன் ஆகிய 4 பேர் மீதுதான் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதுபோன்ற குற்றசெயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications