"பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது”.. தவெக நிர்வாகி ஜாமீன் மனு மீது ஐகோர்ட் நீதிபதி கருத்து
மதுரை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கைதான தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டில் தான் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் தரப்பு வாதிட, "இந்தச் சம்பவத்தில் பொறுப்பு இல்லை என தட்டிக் கழிக்க முடியாது; அனைவருக்கும் பொறுப்புள்ளது" என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

தவெக தலைவர் விஜய் தாமதமாக கரூருக்கு வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என காவல்துறை தரப்பிலும், காவல்துறை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை, காவல்துறையின் அறிவுறுத்தல்படியே நாங்கள் செயல்பட்டோம் என்று தவெக தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக நகர செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை கரூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட காரணத்தால், வழக்கில் சிபிஐ தரப்பையும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட வேண்டும் என்பதால் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கரூர் ஆறுமுக பாளையத்தைச் சேர்ந்த தவெக கரூர் மத்திய நகரச் செயலாளர் பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமின் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் நீதிமன்ற காவலில் இருக்கிறேன்.
நான் பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர் அல்ல. பொதுக்கூட்டத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணை தொடங்கியுள்ள சூழலில், என்னை நீதிமன்ற காவலில் வைப்பது தேவையற்றது. என் மீது இதற்கு முன்பாக எவ்விதமான குற்ற வழக்குகளும் இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன். ஆகவே இந்த வழக்கில் எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பவுன்ராஜ் தரப்பில், "நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் கூட மனுதாரர் இல்லை எனவே ஜாமின் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "இந்த சம்பவத்தை பொறுத்தவரை பொறுப்பு இல்லை என தட்டிக் கழிக்க முடியாது. அனைவருக்கும் பொறுப்பு உள்ளது" என குறிப்பிட்டார்.
மேலும், இந்த வழக்கில் ஏன் சிபிஐ எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை? என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பில், "சிபிஐ-யை எதிர்மனுதாரராக சேர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications