மேலூர் தொகுதி யாருக்கு? உட்கட்சி மோதலால் திண்டாடும் அதிமுக.. எடப்பாடி பழனிசாமியின் கணக்கு என்ன?
மதுரை: மதுரை மேலூர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட சிட்டிங் எம்எல்ஏ-வான பெரியபுள்ளான் காய் நகர்த்தி வரும் சூழலில், இன்னொரு பக்கம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தமிழரசன் போட்டியிட தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஒரு ராஜன் செல்லப்பா மூலமாகவும், மற்றொருவர் ஆர்பி உதயகுமார் மூலமாகவும் எடப்பாடி பழனிசாமியை அணுகி இருக்கின்றனர்.
மதுரையில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மேலூர் தொகுதி அதிமுகவின் கோட்டை என்று உறுதியாக சொல்ல முடியும். இதனால் மேலூர் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளிடம் தள்ளிவிடும். இதனால் மேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்று மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.

2001 முதல் 2016 வரை அதிமுகவின் சாமி எம்எல்ஏ-வாக இருந்தார். இதன்பின் 2016 முதல் தற்போது வரை பெரியபுள்ளான் தொடர்ந்து 2 முறை எம்எல்ஏ-வாக வென்றுள்ளார். இம்முறை ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். ஆனால் பெரியபுள்ளானை ஓரம்கட்டி மேலூர் தொகுதிக்கான எம்எல்ஏ சீட்டை கைப்பற்ற தமிழரசன் காய் நகர்த்தி வருகிறார்.
ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சீமைச்சாமியின் சகோதரர் தமிழரசன். இதன் காரணமாகவே தமிழரசனுக்கு 2011 சட்டசபைத் தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் சீட் அளிக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்ற போதும், தொடர்ந்து வெற்றியை தக்க வைக்க முடியவில்லை. இதனால் இம்முறை மேலூர் தொகுதியில் போட்டியிட களமாடி வருகிறார்.
அதேபோல் பெரியபுள்ளானுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக எம்எல்ஏ பெரியபுள்ளான் எங்கு சென்றாலும், அவருடன் தமிழரசன் உடனிருந்தார். மேலூர் தொகுதியை பொறுத்தவரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா கட்டுப்பாட்டில் வருகிறது. ஆனால் இவர்கள் இருவருமே ஆர்பி உதயகுமாரின் ஆதரவாளர்களாக இருந்து வந்தனர்.
ஆனால் மேலூர் தொகுதியில் போட்டியிட தமிழரசன் முயற்சிப்பதை அறிந்து, பெரியபுள்ளான் அதிருப்தியில் இருக்கிறார். இதனால் தொகுதிக்குள் இருவருமே தனித்தனியாக பணியாற்றுகின்ற்னர். தேர்தல் சீட் காரணமாக இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் ஆர்பி உதயகுமாரின் ஆதரவு இம்முறை தமிழரசனுக்கு தான் இருக்கிறது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக மேலூர் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ பெரியபுள்ளான் திடீரென ராஜன் செல்லப்பாவுடன் நெருக்கம் காட்டத் தொடங்கி இருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன என்பதே மேலூர் அதிமுக நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒருவேளை மீண்டும் பெரியபுள்ளானுக்கு சீட் வழங்கப்பட்டால், தமிழரசன் அவருக்கு எதிராக வேலை செய்யவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications