மதுரை கமிஷ்னர் ஆபிஸ் அருகே செயின் பறிப்பு .. ஆட்டோவிற்கு கைமாறும் செயின்.. புதிய ஆதாரம்.. வைரல் வீடியோ
மதுரை: செயின் பறிப்பவர்கள் பெண்களின் வாழ்க்கையை துன்பமாக்கியுள்ளனர். சங்கிலியை பறிப்பதால் மட்டுமல்ல, சங்கிலியை பறித்துவிட்ட பின்னர் நகரும் போது இரு சக்கர வாகனங்களில் இருந்து கீழே விழும்போது பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. மதுரை கமிஷ்னர் ஆபிஸ் அருகே அப்படி நடந்த ஒரு சம்பவம் குறித்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. செயின் பறிப்பு கொள்ளையர்களின் செயலால் பெண்கள் உயிரிழக்கும் சம்பவங்களும், படுகாயம் அடைந்து ஊனம் அடையும் சம்பவங்களும் நடக்கிறது.
ஆனால் செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு பெரிய தண்டனைகள் கிடைத்திருக்கிறதா என்றால் இல்லை என்பதை கசப்பான உண்மை. ஏனெனில் திருட்டு சம்பவங்களில் கைதாகும் கொள்ளையர்கள் அடுத்த 3 மாதங்களில் விடுதலையாகி விடுகிறார்கள். மீண்டும் சிறையில் இருந்து வந்த உடன் பழையபடி செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள்.

கொள்ளையர்கள்
எந்த ஊரில் யார் யார் தொடர் செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்களோ அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதை காவல்துறையும் பலமுறை செய்து வருகிறது. ஆனாலும் அடுத்த ஓராண்டிலோ அல்லது இரண்டு ஆண்டிலோ வெளிவரும் கொள்ளையர்கள் மறுபடியும் செயின் பறிப்பில் ஈடுபடாமல் இருக்கிறார்களா என்றால்.. இல்லை என்பதே பதிலாக உள்ளது.

மதுரையில் செயின்பறிப்பு
சரி விஷயத்துக்கு வருவோம்.. கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி மதுரை தல்லாகுளம் காவல்நிலையம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகம் அருகிலேயே அடுத்தடுத்து செயின்பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. மதுரை சர்வேயர்காலனி பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள்(34). இவர் உறவினர் பெண்ணுடன் அழகர்கோவில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பேச்சியம்மாள் அணிந்திருந்த தங்க செயினை பறித்தார்.

விசாரிக்க கோரிக்கை
இதனால் வாகனத்திலிருந்து நிலைதடுமாறி விழுந்து பேச்சியம்மாள் மற்றும் அவரது உறவினரும் கீழே விழுந்தனர். இந்த செயின்பறிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பைக்கில் வந்த டிப்டாப் ஆசாமி செயினை பறித்துக்கொண்டு வேகமாக செல்கிறார். இரண்டு ஆட்டோக்கள் அந்த நேரத்தில் கிராஸ் ஆகின்றன. ஒரு ஆட்டோவில் அவர் செயினை கொடுத்துவிட்டு செல்கிறார். இப்படியாக வீடியோ செல்கிறது. இதையடுத்து செயின் பறிப்பு தொடர்பாக மதுரையில் உள்ள ஆட்டோக்களை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மக்கள் கோரிக்கை
செயின் பறிப்பு அல்லது திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்ந்து அதையே தொழிலாக செய்வது அதிகரித்துள்ளது. எனவே இதுபோன்ற குற்றவாளிகளால் பாதிக்கப்படும் பெண்கள் வாழ்நாள் முழுவதும் மனவேதனைக்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் மரணத்தையும் சந்திக்கும் நிலை வருகிறது. எனவே செயின் பறிப்பு குற்றவாளிகளை கொடூர குற்றவாளிகளை போல் கருதி அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிக்கும் குற்றவாளிகள்
சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் முக்கியமான அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் காரணமாக செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பிடிபடும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அதேநேரம் சிறிய நகரங்களில், மற்றும் மற்ற நகரங்களில் இன்னமும் சிசிடிவி கேமராக்கள் பல பகுதிகளில் நிறுவப்படவில்லை. எனவே சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படவில்லை. அங்கு கேமராக்களை நிறுவினால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தப்ப முடியாத நிலை ஏற்படும்.












Click it and Unblock the Notifications