“அலறப்போகுது ஆண்டவரால் டெல்லி.. அடிக்கப்போறோம் 2024-ல் சொல்லி!” டிஆர் ஸ்டைலில் தெறிக்க விடும் மநீம!
மதுரை : ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை பங்கேற்க இருக்கும் நிலையில், "ஆழ்வார்பேட்டையே! அரசியலின் பள்ளி.. அடிக்கப் போறோம் 2024-ல் சொல்லி.. அலறப்போகுது ஆண்டவரால் டெல்லி.. இனி இவரே நேர்மை அரசியலில் பெரும் புள்ளி!" என்கிற வாசகத்துடன் மதுரையில் பல்வேறு பகுதியில் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் நாளை பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்றிரவு டெல்லி செல்லவுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த அரசியல் நகர்வு, அவரது கட்சியினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2021 தேர்தல் தோல்விக்குப் பிறகு, தற்போது கமல்ஹாசன் தனது அரசியல் வியூகங்களை அதிரடியாக அமைத்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

ராகுல் யாத்திரையில் கமல்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதல் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து இந்த பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்து தற்போது டெல்லியை நெருங்கியுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று கமல்ஹாசன் நாளை டெல்லியில் நடைபெறும் யாத்திரையில் பங்கேற்க இருக்கிறார். இதற்காக இன்றிரவு விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார்.

டெல்லியில் திரளும் மநீம கட்சியினர்
நாளை (டிசம்பர் 24) டெல்லியில் நடைபெறும் பயணத்தில் ராகுல் காந்தியுடன் இணையவுள்ளார் மநீம தலைவர் கமல்ஹாசன். அப்போது கமல்ஹாசனோடு மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். யாத்திரையில் கலந்துகொள்ள இருக்கும் நிர்வாகிகளும், தொண்டர்களும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், தற்போது டெல்லியில் கடுமையான குளிர் வாட்டுவதால், அனைவரும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வரவேண்டும் என்று கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டணிக்கு உறுதியான அஸ்திவாரம்
மக்கள் நீதி மய்யம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் - திமுக உள்ளிட்ட கட்சிகளின் மெகா கூட்டணியில் இணையும் வகையில் மநீம தலைவர் கமல்ஹாசன் வியூகம் வகுத்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நாளை டெல்லியில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். இந்தப் பயணமே, கூட்டணிக்கான உறுதியான அஸ்திவாரம், அதைத் தொடர்ந்து தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவிக்கின்றனர்.

அலறப்போகுது ஆண்டவரால் டெல்லி
இந்நிலையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பது குறித்து மதுரையில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியினர், பின்னணியில் நாடாளுமன்றம் அடங்கிய புகைப்படத்துடன் உள்ள போஸ்டரில், "ஆழ்வார்பேட்டையே! அரசியலின் பள்ளி.. அடிக்கப் போறோம் 2024-ல் சொல்லி.. அலறப்போகுது ஆண்டவரால் டெல்லி.. இனி இவரே நேர்மை அரசியலில் பெரும் புள்ளி!" என்கிற வாசகத்துடன் அடங்கிய போஸ்டர்களை மதுரையில் பல்வேறு பகுதியில் ஒட்டியுள்ளனர்.

தமிழகத்தின் மாற்றம் - நம்மவர்
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியினர், ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் கைகோர்த்து நிற்பது போன்ற புகைப்படத்துடன் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரில், "இந்தியாவின் மாற்றம் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு தமிழகத்தின் மாற்றம் நம்மவர் அழைக்கிறார், கை கோர்ப்போம், வலு சேர்ப்போம்" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications