டி. குண்ணத்தூரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் - ஜன.30ல் முதல்வர் தலைமையில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா - விற்கு தனது சொந்த செலவில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கோவில் எழுப்பியுள்ளார்.
மதுரை: திருமங்கலம் அருகே டி. குண்ணத்தூரில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.., ஜெயலலிதாவிற்கு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கோவில் எழுப்பியுள்ளார். தை பொங்கல் தினத்தன்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு அபிஷேகம் செய்தார் அமைச்சர். ஜனவரி 30ஆம் தேதி அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சட்டசபைக்குள் செருப்பு போடாமல் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். அம்மா இருக்கும் இடம் கோவில் என்று சொன்னவர் அமைச்சர். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தொண்டர்கள் பலர் சிலை அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதாவிற்கு தனது சொந்த செலவில் கோவில் கட்டியுள்ளார். அந்த கோவிலில் தை பொங்கல் தினத்தில் எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதாவின் 6 அடி உயர வெண்கல சிலை பிரதிஷ்டை செய்தார் அமைச்சர். அமைச்சரும், அதிமுக தொண்டர்களும், கிராம மக்களும் எம்ஜிஆர்,ஜெயலலிதா சிலைகளுக்கு பால், பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தனர்.
இந்த கோவிலில் வரும் 30ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பி.எஸ் இணைந்து கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த கோவில் கட்டி வருவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், உலகமெங்கும் வாழும் 10 கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருகிறார் ஜெயலலிதா.
மக்கள் நலனே தன் நலன் என்று மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து ஒரு தியாக தீபமாக வாழ்ந்து ஒன்றரை கோடி கழகத் தொண்டர்களின் குலதெய்வமாக அம்மா திகழ்ந்து வருகிறார்
இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மா அவர்கள் இலட்சிய முழங்க முழக்கமிட்டார் அந்த லட்சியம் முழக்கங்களை இன்றைக்கு நமது முதல்வரும், துணை முதல்வரும் அம்மாவின் பாத தடத்தில் அடிபிறழாமல் நிறைவேற்றுகின்றனர்.
ஜெயலலிதா முக்காலும் உணர்ந்த தீர்க்கதரிசி அதனால்தான் இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ் இனமே வணங்கும் தமிழர் குலசாமி அவர் திகழ்கிறார்கள். தொடர்ந்து இன்றைக்கு எங்களது குடும்பத்தாரும் குல தெய்வமாக அம்மாவை வழிபட்டு வருகிறோம் அந்த தெய்வத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் நல்லாசியுடன் தற்போது கழக அம்மா பேரவை சார்பில் கோயில் கட்டி வருகிறோம் என்று கூறினார்.
இந்த திருக்கோவிலில் அனைத்து மக்களும் வழிபடும் வண்ணம் அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.