காலைல சி.எம் வருவாரு.. ‘சிற்றுண்டி திட்டம்’ - அதிரடி ஆய்வில் இறங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்!
மதுரை : தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நாளை காலை மதுரையில், 1- 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கும் நிலையில், இன்று இரவு அதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டு அதிகாரிகள், ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அண்ணா பிறந்தநாளையொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை மாநகராட்சிப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.
மற்ற மாவட்டங்களில் வரும் 16ஆம் தேதி முதல் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காலை உணவுத் திட்டம்
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

நாளை தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் 1545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் ஊட்டச் சத்து மிக்க காலை உணவு வழங்கும் திட்டத்தை நாளை முதல்வர் ஸ்டாலின், மதுரையில் தொடங்கி வைக்க இருக்கிறார்.

மதுரை வந்த ஸ்டாலின்
1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை மாநகராட்சி பள்ளியில் தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்றே மதுரைக்கு வந்துள்ளா முதல்வர் ஸ்டாலின். இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்த பிறகு 16-ஆம் தேதி அமைச்சர்கள் அவர்களின் மாவட்டங்களில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

அமைச்சர் ஆய்வு
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கப்போகும் மதுரை மாநகராட்சி பள்ளி மற்றும் உணவு தயாரிக்கும் இடங்களையும், பொருட்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிமாற இருக்கும் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவது குறித்து கேட்டறிந்து ஆலோசனை கூறியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.












Click it and Unblock the Notifications