'கொலை நகரமாக' மாறிவரும் 'கோவில் நகரம்' மதுரை: 9 மாதங்களில் 64 கொலைகள்
மதுரை: எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா சொன்னாலும் தினசரி கொலை, கொள்ளைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் கோயில் நகரமான மதுரை கொலை நகரமாக மாறி வருகிறது.
போதை தகராறு, பழிக்குப் பழி, வெட்டுக்குத்து, கள்ளக்காதல் என கடந்த 9 மாதங்களில் மதுரையிலும் மதுரையைச் சுற்றியும் 64 கொலைகள் நடந்துள்ளன. அதுவும் கடந்த வாரம் 15 மணிநேரத்திற்குள் மதுரையின் முக்கிய பகுதியில் 5 தலைகள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு தினத்தில்
2014ஆம் ஆண்டு மதுரையில் நள்ளிரவு 12 மணியளவில் மதுரை புதூரில் செந்திலநாதன் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். புதுவருடப்பிறப்பு கொலையோடு ஆரம்பித்தது. போதை தகராறு கொலைக்கு காரணமானது. ஜனவரி 3ல் கள்ளக்காதல் தகராறில் வில்லாபுரத்தில் தமிழரசன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இரட்டைக்கொலை
ஜனவரி 4ஆம் தேதி கோஷ்டி மோதலில் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கண்ணன். இருவரும் இரட்டைக்கொலை செய்யப்பட்டனர். ஜனவரி 8 ஆம் தேதி தல்லாக்குளத்தை சேர்ந்த அழகுபாண்டி என்பவர் பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டார்.
காதல் கொலை
ஜனவரி 22 ஆம் தேதி காதல் பிரச்னையில் கரும்பாலை பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஜனவரி 23ல் வில்லாபுரத்தில், வாழப்போன இடத்தில் அடிக்கடி தொல்லை தருகிறார் என்கிற காரணத்துக்காக அக்காவின் மாமியாரை கொலை செய்தார் ஒரு பெண்.
கள்ளக்காதல் கொலை
ஜனவரி 30ல் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மேலூர் அரிட்ட பட்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை அவரது மருமகள் தனது கள்ளக்காதலன் மூலம் அவரது தலையை துண்டித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
வீடு புகுந்து கொலை
பிப்ரவரி 6ல் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்வீட்ஸ் கடை ஓனரின் மகள், பட்டப் பகலில் வீட்டுக்குள் கொலைசெய்து கிடந்தார். இன்னமும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பிப்ரவரி 17 ல் மேலூர் அண்ணா காலனியில் சைக்கிளில் தெரு வழியாக போனதால் நடந்த சண்டையில் வீரன் என்பவர் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டார்.
பெரியார் பேருந்து நிலையத்தில்
பிப்ரவரி 18ஆம் தேதி மதுரை கருடர் பாலம் அடியில் இளம் வயது ஆண் பிணம் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீஸுக்கு தகவல் தந்தனர். இறந்தவர் யார் என்ற விவரம் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
பிப்ரவரி 21ல் பெரியார் பேருந்து நிலையத்தில் பால்பாண்டி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சட்டக்கல்லூரி மாணவர் கொலை
பிப்ரவரி 22 ஆம் தேதி மதிச்சியம் வைகை ஆற்றுப் பகுதியில் காமராஜர் புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற சட்டக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார்.
அடகுக் கடையில் கொலை
மார்ச் 28ல் சிந்தாமணி தியேட்டர் பகுதி லட்சுமிபுரம் கோகுல்நகை அடகுக்கடை ஓனர் சின்னையா என்பவர் இரவு 7 மணிக்கு கொலை செய்யப்பட்டார். இதே நாளில் பெத்தானிய புரத்தில் பாண்டீஸ்வரி என்பவர் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மார்ச் 30ல் சுப்ரமணியபுரத்தில் மாமியார் மூக்காயி என்பரை அவரது மருமகன் டேவிட் ஆனந்தகுமார் இரவில் கொலை செய்தார்.
குடிபோதையில் கொலை
ஏப்ரல் 8ல் பழங்காநத்தம் பைகாரா பகுதியைச் சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளியான கண்ணன் என்பவர் குடி போதையில் நடந்த தகராறில் கொலை செய்யபட்டார்.
கணவரை கொன்ற மனைவி
ஏப்ரல் 10ல் அலங்காநல்லூரில் பரமசிவம் என்பவரை அவரது மனைவி பாப்பாத்தி தனது ஆண் நண்பரான கார்த்திக்ராஜா என்பவருடன் சேர்ந்து கொலை செய்தார்.
அம்மாவை கொன்ற மகன்
ஏப்ரல் 12ல் தத்தனேரியில் குடிபோதையில் அம்மா பேச்சியம்மாளை அவரது மகனே கொலை செய்துவிட்டார்.
ஏப்ரல் 14ல் உசிலம்பட்டியில் உறவினர்களுக்குள் நடந்த ஈகோவால் கார்த்திக்ராஜா என்பவர் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அழகர் கோவிலுக்குள் கொலை
ஏப்ரல் 1ஆம் தேதி அழகர் கோயிலுக்குள் உள்ள நடைபாதை பகுதியில் காலை 5 மணிக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த் முத்துப்பாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பெண் கொலைகள்
ஏப்ரல் 19ல் விராகனூர் பகுதியில் ஆயிரம் பிள்ளை என்கிற பெண் கொலை செய்து கிடந்தார். இதுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஏப்ரல் 21ல் மேலூர் கொட்டக்குடி பகுதியில் வீரம்மாள் என்பவர் கழுத்து நெரித்துக் கொலை. காரணம் கண்டு பிடிக்கப்படவில்லை.
கிணற்றில் சடலம்
மே 2ல் மேலூர் பகுதியில் உள்ள கல்குவாரி கிணற்றில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரைக் கடத்திவந்து கொடூரமாகக் கொலை செய்து போட்டுவிட்டுச் சென்றனர். காரணம் தெரியவில்லை.
மே 13ஆம் தேதி மாடக்குளத்தில் குடியிருப்போர் நலசங்கத் தலைவர் ஆண்டியப்பன் என்பவர் முன்விரோத பகையில் கொலைசெய்யப்பட்டார்.
அப்பாவை கொன்ற மகன்
மே 21ஆம் தேதி உசிலம்பட்டியில் குடிபோதை தகராறில் அப்பா மாயாண்டியை மகன் பாண்டியராஜ் வெட்டி கொலை செய்தான். மே 27ல் கே.கே. நகரில் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக சிவகங்கையில் இருந்து வந்திருந்த விக்னேஷ் என்பவருடன் திருமண பார்டியில் அவரது நண்பர்களுக்குள் வாக்குவாதம். பீர் பாட்டிலால் விக்னேஷ் தலையில் அடித்துக் கொலை. மே 30ஆம் தேதி தல்லாகுளம் பகுதியில் நாகபாண்டி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
முன்விரோத கொலை
ஜூன் 1ஆம் தேதி திருமங்கலம் அ.தி.மு.க. நகரச்செயலாளர் விஜயன் என்பவரது உறவினர் செண்பக பாண்டியனை குடி போதையில் கொலை செய்தது ஒரு குரூப். இதுவும் முன்விரோத பகையில் நடந்த கொலை.
ஜூன் 2: குலமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பழனிச்சாமி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
செக்ஸ் தொல்லை
ஜூன் 3ஆம் தேதி சாப்டூரில் செக்ஸ் தொல்லை கொடுத்த கணவர் துரைப்பாண்டியை அவரது மனைவியே விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்தார்.
ஏலம் தகராறு
ஜூன் 8ல் மதுரை காய்கறி சந்தையில் கடை ஏலம் எடுப்பதில் நடந்த தகராறில் சரவணக்குமார் என்பவர் வெட்டிக்கொலை. இதே நாளில் புதூரை சேர்ந்த செல்வசந்திரன் என்பவர் கொலை செய்து கிடந்தார்.
தோழியை கொலை செய்த பெண்
ஜூன் 10ல் நீண்ட நாட்கள் ஆகியும் எனது மனைவியை காணவில்லை என்று உமாராணி என்பவரின் கணவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால் எட்டு மாதத்துக்குமுன்பு கொலை செய்து புதைக்கப்பட்ட உமாராணியை, அழுகிய நிலையில் கண்டெடுத்தனர். உமாராணியை 50 ஆயிரம் பணத்துக்கு அவரது தோழியான பிரேமா தனது கள்ளக்காதலன் வேல்முருகன் மூலம் கொலை செய்தது தெரியவந்தது.
கண்ணீர் அஞ்சலி கொலை
ஜூன் 14ல் ஜெய்ஹிந்த்புரத்தில் காதணி விழா நடத்திய கல்யாண மண்டபத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் பொழுது நடந்த தகராறில் ஷேக் இப்ராஹிம் என்பவர் சம்பவ இடத்திலே வெட்டிக்கொலை. இதே நாளில் கருப்பாயூரனி ரிங் ரோட்டில் இரவு கரிமேடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி செந்தில்குமார் கொலை செய்துகிடந்தார்.
தந்தையர் தின கொலை
ஜூன் 15 தந்தையர் தினத்தன்று உசிலம்பட்டியில் குடிபோதையில் தந்தை அழகர்சாமியை மகன் ராமர்பாண்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்து, செய் நன்றி காட்டினார். ஜூன் 19 ல்பேரையூர் அரசபட்டியில் இரவில் செல்வம் என்பவர் உறவினர் மூலம் கொலை செய்யப்பட்டார்.
போதையில் கொலை
ஜூன் 29ல் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூரில் ஹோட்டல் நடத்தி வந்த ஜான் சுதாகர், எட்வின் என்கிற இருவரும் தன்னிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளியான சிவன்காளையை இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்றனர். காரணம் குடி போதையில் நடந்த தகராறு.
வெட்டிக்கொலை
ஜூலை 2ல் கருப்பாயூரணி குன்னத்தூரை சேர்ந்த டிரைவர் முத்துராஜா. திடீரென ஒரு நாள்... அவரது வீட்டுக்குள் பரமசிவம் என்பவர் புகுந்து, முத்துராஜாவின் மனைவி, குழந்தைகள் என கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். முத்துராஜ் அதே இடத்தில் பிணமானார். கொலையாளி பரமசிவம் போலீஸில் "தனது மனைவியை அபகரித்துக் கொண்டதால் கொலைசெய்தேன்" என்று சொன்னார்.
மாணவர் கோஷ்டி கொலை
ஜூலை 6ல் பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரி மாணவன் சேது சூர்யா. கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் பட்டப்பகலில் கொலை செய்தது மாணவர் கோஷ்டி.
தம்பியை கொன்ற அண்ணன்
ஜூலை 9ல் சோழவந்தானில் சீனிவாசன் என்பவர் அவரது சகோதரனால் கொலை செய்யப்பட்டார். இதே நாளில், கூடல்நகர் எஸ்.வி.பி. நகரில் ஆண் சடலம் ஓன்று எரிந்த நிலையில் கிடந்தது.
சொத்து தகராறு
ஜூலை 12ல் ஜீவா நகரில் சொத்து தகராறில் தம்பி கணேசனை அண்ணன் பாலமுருகன் என்பவர் கொலை செய்தார்.
ஜூலை 13ல் அ.தி.மு.க பிரமுகர் ஜெயபாண்டி என்பவர் மதுரை கலெக்டர் அலுவலக சாலையில் வைத்து வெட்டி கொலை. இது, பழிக்குப் பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ்.
ஜூலை 16ல் கள்ளக்காதல் தகராறில் போஸ் என்பவரை சிவபாண்டி போதையில் கொலை செய்தார்.
பழிக்குப் பழி கொலைகள்
ஆகஸ்ட் 5ல் உசிலம்பட்டி மாதரையில் கோழிக்கடை பாண்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 6ல் திருமங்கலத்தில் காதர் மொய்தீன் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரது அண்ணன் பஷீர் என்பவர் தனது மைத்துனியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு சொல்லி கேட்காமல் போனதால் காதர் மொய்தீன் கொலை செய்யப்பட்டாராம்.
கோஷ்டி கொலைகள்
ஆகஸ்ட் 7: யாகப்பா நகரில் சிடி கடை நடத்தும் தகராறில் ஜெகதீசன் கோஷ்டியினர் விஜயகுமாரை கொன்றனர். ஆகஸ்ட் 8ல் மதுரை திருப்பாலை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் காலை நேரத்தில் வக்கீல் முத்துதுரையை மூன்று பேர் கொண்ட குழு அரிவாளால்வெட்டி கொத்து பரோட்டா போட்டுவிட்டு பறந்துவிட்டது.
அன்று இரவே அ.தி.மு.க பிரமுகர் கீழவளவு பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் வெட்டி கொலை. வெட்டிய கும்பலில் ஒருவரான நிரஞ்சன் என்பவரது மணிக்கட்டில் தவறுதலாக வெட்டுக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அட்மிட் ஆகி இரண்டு நாளில் நிரஞ்சன் மரணம் அடைந்தார்.
24 மணிநேரத்தில் 5 கொலைகள்
மதுரை புதூர் தி.மு.க செயலாளர் வேலுவின் மகன் முத்துப்பாண்டி தி.மு.க-வின் ஒன்றிய துணை அமைப்பாளர். இவர், கடந்த 18-ம் தேதி மதுரை அரசு ஐ.டி.ஐ எதிரே உள்ள சாலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அதே நாளில் தல்லாகுளம் பகுதியில் 'தி.மு.க தல்லாகுளம் பகுதி பொறுப்பாளர் கருணாநிதியின் கார் டிரைவரான கருப்பையா ரியல் எஸ்டேட் பிரச்னையின் தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ளார்
3 பேரை வெட்டிய 10 பேர்
கடந்த வெள்ளிக்கிழமையன்று பகலில் ஜெய்ஹிந்த்புரத்தில் ஒரு வீட்டுக்குள் மூவரைக் கொடூரமாக வெட்டிக்கொன்றுவிட்டு சென்றது 10 பேர் கொண்ட கும்பல். மதுரை தமிழகத்தின் முக்கியமான பகுதி. இங்கு இருக்கும் கமிஷனர், டி.சி, எஸ்.பி என எல்லாருமே வெளி மாநிலத்தவர்கள். அதனால் இங்கு நிலவும் உள்ளூர் பிரச்னையை அவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை. கமிஷனர், எஸ்.பி-யை உடனடியாக மாற்றினால்தான் மதுரையில் கொலைச் சம்பவங்கள் குறையும்'' என்று கூறுகின்றனர் பொதுமக்கள்.