இனி “நோ எஸ்கேப்”.. வாகனம் ஓட்டும் குடிமகன்களை பிடிக்க மதுரையில் புதிய “மெஷின்”! போலீசுக்கும் செக்
மதுரை: முதன்முறையாக குடிபோதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கு புகைப்படம் மற்றும் இடத்துடன் கூடிய புதிய வகை அபராத ரசீது வழங்கும் ப்ரீத் அனலைசர் கருவி மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு தேவையான செலவீனகளுக்காகவும், நவீனப்படுத்தவும் ரூ.1.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி செல்பவர்களை கண்காணிக்கும் வகையில் மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு தேவையான புதிய கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

நவீன கருவிகள்
இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 50 புதிய வகை ப்ரீத் அனலைசர் கருவிகள், ஒளிரும் பாட்டன் லைட்டுகள், ரிஃப்லெக்டிவ் ஜாக்கெட், கையுறை மற்றும் ப்ளாஸ்டிக் பேரிகாட்கள் உள்ளிட்ட உபகரணங்களை மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களிடம் வழங்கினார்.

புதிய வசதிகள்
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு இருக்கும் புதிய வகை ப்ரீத் அனலைசரில் பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டு உள்ளன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்யும் போது ஆக்டிவ் மோட், பாசிவ் மோட் என இரண்டு வகைகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அருகில் சென்றாலே தெரிந்துவிடும்
அதன்படி சோதனைக்கு ஒத்துழைக்காத வாகன ஓட்டிகளின் பாசிவ் மோட் மூலமாக வாகன ஓட்டியின் வாயின் அருகில் கொண்டு சென்றாலே மது அருந்தியுள்ளாரா என்பது குறித்து அறிந்துகொள்ள முடியும். மேலும் ஆக்டிவ் மோட் மூலமாக ப்ரீத் அனலைசரில் ஊதும்போது வாகன ஓட்டியின் முகத்தை புகைப்படம் எடுக்கும்.

அபராத ரசீது
அத்துடன் வாகன பதிவு விவரங்கள் மற்றும் லொகேஷன் போன்ற முழு விவரங்களுடன் அபராத ரசீது கிடைக்கும். இதனை நீதிமன்றத்தில் சமர்பித்து நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் இது அதிநவீன ப்ரீத் அனலைசராக பயன்படுத்தபட உள்ளது. இந்த ப்ரீத் அனலைசரில் இருந்து அபராத ரசிதீனை வாகனத்தின் அடிப்படையில் மீண்டும் கணினி மூலமாக திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு லட்சம் பதிவுகள்
ஒரு ப்ரீத் அனலைசர் இயந்திரத்தில் 1 லட்சம் பதிவுகளை பதிவேற்றம் செய்துகொள்ளும் வசதி உள்ளது. இந்த புதிய வகை ப்ரீத் அனலைசர் நாளை முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை மருத்துவரிடம் அழைத்து செல்வது போன்ற அலைச்சல் குறைவதோடு, வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு இடையேயான சுமூக நிலை உருவாகும் என்று நம்பப்படுகிறது.

லஞ்சம் குறையும்
இதற்கு முன் குடிபோதையில் வாகனம் ஓட்டி செல்பவர்கள் பழைய ப்ரீத் அனலைசர் கருவியில் சிக்கினால், அவர்கள் மீது சில போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்காமல் லஞ்சம் வாங்கிவிட்டு அனுப்பிவிடுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், இந்த கருவி மூலம் அதுவும் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவல் ஆணையர் அறிவுறுத்தல்
இந்த கருவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய மதுரை மாநகர காவல் ஆணையர், போக்குவரத்து காவல்துறையினர் தங்களது பாதுகாப்பு கருதி சாலைகளில் நடுவில் சென்று வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியின் போது மாநகர காவல்துறை துணை ஆணையர் மோகன்ராஜ் உள்ளிட்ட மாநகர போக்குவரத்து காவல்துறையினர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications