பாஜகவை எதிர்க்க புது ஐடியா.. சிபிஎம் எடுத்த "கோவில் திருவிழா" வியூகம்! கைகொடுக்குமா? என்ன திட்டம்?
மதுரை: பண்பாட்டு களத்திலும் பாஜகவை எதிர்க்க கோவில் திருவிழாக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்நின்று நடத்தப்போவதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கட்சியின் 23 வது மாநில மாநாடு வரும் மார்ச் 30, 31 ஏப்ரல் ஒன்றாம் தேதி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

மத்திய அரசின் போக்கு ஆபத்தானது
மத்திய அரசு கற்பனைக்கு எட்டாத அளவு ஆபத்தான நிலையில் பயணிக்கிறது. ஒற்றை கலாச்சாரம், மொழி, கூட்டாட்சி தத்துவம், கல்வி உள்ளிட்டவைகளை ஒன்றிய அரசே நிர்ணயிக்கும் என்ற நிலைபாட்டுடன் செயல்படுகிறது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்படக்கூடாது. வேந்தர்கள் பெயரில் கல்வியை ஒற்றை ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயலுகிறது.

தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயலும் பாஜக
சாதாரண பிரச்சனைகளை மத கலவரமாக மாற்றி தமிழகத்தில் அசாதாரண சூழலை பாஜக ஏற்படுத்த முயற்சி செய்கிறது.பண்பாட்டு தளத்தில் பாஜகவை எதிர்ப்பது குறித்தும் இந்த மாநில மாநாட்டில் விவாதிக்க பட உள்ளது. மத்திய அரசின் தவறான கொள்கையால் சிறு குறு தொழில்கள் மூடப்பட்டு வருகின்ற்ன. அரசு ஊழியர்களின் பணி நிரந்தரம் கேள்வி குறியாக உள்ளது. சம்பளக் குறைப்பு தொடர்ந்து வருகிறது.

பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும்
விருதுநகரில் பாலியல் வன்புணர்வு குறித்த செய்தி நேற்றைய தினம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். டாஸ்மாக் கடைகளை குறைக்க தமிழக அரசு முயற்சிக்கவேண்டும். காதலர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது வருத்தமளிக்கிறது. இளம் காதலர்களுக்கு பாதுகாப்பதுடன் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட வைக்க வேண்டும். காதலர்களுக்கு மார்சிஸ்ட் கட்சி பாதுகாப்பாக துணை நிற்கும்.

இனி கோயில் விழாக்களை மார்க்சிஸ்ட் நடத்தும்
கருத்தியல் ரீதியாக போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதை போன்று கோவில் விழாக்களில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்பதுடன் முன்நின்று நடத்த முயற்சி செய்வோம். கோவில் விழாக்களில் ஆர்.எஸ்.எஸ். கொடிகளை நட்டு மத உணர்வை தூண்டி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மதசார்பற்ற முறையில் அனைத்து மதத்தினரும் கோவில், தர்கா, தேவாலயங்களுக்கு சென்று வழிபடுகின்றனர். அவர்களை பாதுகாப்பதும் நம் கடமை. எனவே மார்ச்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி இனி கோவில் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும்.

இந்தியாவுக்கும் இலங்கை போன்ற நிலை வரலாம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை போன்று நாளை இந்தியாவிலும் ஏற்படலாம். உத்திரபிரதேச தேர்தல் அறிவித்த நாள் முதல் 4 மாதத்திற்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையேற்றம் செய்யாமல் தற்போது விலையை உயர்த்தி உள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக குறைந்த விலைக்கு எண்ணெய் இறக்குமதி செய்தபோதிலும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications