திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது! ஹைகோர்ட்டில் கோயில் நிர்வாகம் வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக் கூடாது என 3ஆவது நீதிபதி விசாரணையில் கோயில் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அது போல் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்கா, அதன் முன்பு உள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவுக்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் எல்லாம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை.

இதை நாங்களாக சொல்லவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட்டு, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போல் பரமசிவம் என்பவர் மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த முஸ்லீம்கள் முயற்சிக்கிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தார்.
அது போல் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அப்துல் ஜாபர் என்பவர் தர்கா, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனு தெய்திருந்தார்.
அது போல் திருப்பரங்குன்றம் ஓசீர்கான் என்பவர், மலையில் உள்ள தர்மா, பள்ளிவாசல் நிர்வாகத்தில் அதிகாரிகள் தலையிடக் கூடாது. அந்த பகுதியில் சீரமைப்பு, கட்டுமானப் பணி மேற்கொள்வதை தடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என மனு செய்திருந்தார்.
அது போல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மேல்சித்தாமூர் ஜினா காஞ்சி ஜெயின் மடம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேனா பட்டாரக் பட்டாச்சாரிய மகா சுவாமிகள், திருப்பரங்குன்றம் மலையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான படுகைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவை உள்ளன.
அவற்றை பாதுகாக்க மலையை சமணர் குன்று என அறிவிக்க உத்தரவிட வேண்டும் என மனு செய்திருந்தார். இந்த வழக்குகளை நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது ஜூன் 24 ஆம் தேதி அனைத்து மனுக்களையும் நிஷா பானு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அது போல் நீதிபதி ஸ்ரீமதியோ, சோலை கண்ணன், பரமசிவம், ராமலிங்கம் மனுக்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. ஓசிர்கான் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அது போல் இதர மனுக்களும் ரத்து செய்யப்படுகின்றன என உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவுகளை வழங்கியதால் 3ஆவது நீதிபதி விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்படி அவர் இந்த வழக்கை நேற்று விசாரித்தார். சோலை கண்ணன், பரமசிவம், ராமலிங்கம் ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் கார்த்திகேய வெங்கடாஜலபதி, ராமகிருஷ்ணன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோ, சிக்கந்தர் மலை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மலை சிவலிங்க வடிவில் உள்ளதாக லண்டன் பிரிவு கவுன்சில் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடு, கோழி பலியிடும் நடைமுறை ஏற்கெனவே இல்லை. புதிதாக புகுத்த முயற்சிகள் நடக்கின்றன. சமூகவலைதளத்தில் தவறான கருத்து பரப்பப்பட்டது. கோயில் தரப்பு வழக்கறிஞர் மனோகரன், மலையில் ஆடு, கோழி பலியிடக் கூடாது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விஜயகுமார், "அறநிலையத் துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மலையின் எல்லைகள் நிர்ணயம் தொடர்பாக வரைப்படம் தேவைப்படுகிறது" என கூறிய அவர், ஜூலை 31 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications