ஊழலிலேயே கொடுமையான ஊழல்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் ஆதங்கம்.. ஸ்மார்ட் சிட்டி பற்றி விளாசல்!
மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மூலம் மக்களுக்கு பாதிப்பை உருவாக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரையில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த இரு நாட்களாக மதுரை நகர் மற்றும் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பல மணி நேரம் பெய்த தொடர் மழை காரணமாக சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் இதுவரை வரை மழைநீர் வடியவில்லை.
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து இரவு நேரத்தில் விடிய விடிய பெய்த கனமழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மதுரையில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரையில் அரசு தொழிற்பயிற்சி மாணவியர் விடுதியை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிதியமைச்சர் பேட்டி
இதனைத்தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், 2019 சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, அது செயல்பாட்டுக்கு வருவதற்கு 3 ஆண்டுகள் ஆகிறது. இப்போது கூட நிர்வாகிகள் வருவதற்காக மட்டுமே விடுதியின் முன் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவிகளுக்கான பாதை இதுவரை போடப்படவில்லை.

திட்டமிடுதல் சுலபம்
அரசு தரப்பில் திட்டமிடுவது மிகவும் சுலபம். ஆனால் அதனை வேகமாகவும் சிறப்பாகவும் செயல்படுத்துவது தான் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம். அதனை திமுக அரசு செய்து வருகிறது. அதேபோல் மாநகராட்சி சார்பாக 10 ஆண்டுகளாக எந்தப் பணிகளும் செய்யப்படவில்லை. 5 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருந்தது யார் என்று அனைவருக்கும் தெரியும். மதுரை போன்ற ஒரு மாநகராட்சியில் குடிநீர், கழிவு நீர், மழைநீர் வடிவால் என தனித்தனி குழாய்கள் அமைக்கப்பட வேண்டும்.

திமுக ஆட்சி
இதற்காக கடந்த ஓராண்டாக பல்வேறு துறை வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். இதனை சரி செய்வது கடினமான காரியம். ஆனால் இப்போது சரியான திட்டத்துடன் இருக்கிறோம். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக எதிர்காலத்திற்கு ஏற்ப திட்டமிடுதல் கடினமாக இருக்கிறது. ஒரு நாளிளோ, ஒரு மாதத்திலோ இதனை சரிசெய்துவிட முடியாது. ஆனால் திமுக ஆட்சி நிறைவடைதற்குள் நிச்சயம் மதுரையின் பிரச்னைகள் சரி செய்யப்படும்.

ஸ்மார்ட் சிட்டி ஊழல்
10 ஆண்டுகள் கால்வாய்கள் சரியாக பதிக்கப்பட்டிருந்தால், பராமரிக்கப்பட்டிருந்தால் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு தண்ணீர் நிரம்பி இருக்காது. மக்களுக்கு தேவை இல்லாத திட்டங்களை செயல்படுத்தினால் கூட விட்டுவிடலாம். ஆனால் பாதிப்பை உருவாக்கும் என்று தெரிந்தே திட்டங்களை நிறைவேற்றுவது கொடூரமான ஊழல். அது ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் நடைபெற்றுள்ளது.

ஜிஎஸ்டி கூட்டம்
ஜிஎஸ்டி கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். ஆனால் நாடாளுமன்றக் கூட்டம் மற்றும் சுதந்திர தினம் ஆகியவற்றால், தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் நான்காவது வாரத்தில் நடக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications