மதுரையில் 45 அடி உயர விசிக கொடி.. அனுமதி கொடுத்த வருவாய் ஆய்வாளர் அனிதா சஸ்பெண்ட்
மதுரை: மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி வெளிச்சநத்தம் கிராமத்தில் 45 அடி உயர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி ஏற்ற அனுமதி கொடுத்த விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் அனிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 25 உயர கம்பத்தில் இருந்த விசிக கொடி 45 உயர கம்பத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 7ம் தேதி விசிக தலைவர் திருமாவளவனால் ஏற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 25 அடி உயரமுள்ள கொடி கம்பத்தை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்றி வைத்தார. திருமாவளவன் ஏற்றி வைத்த 25 அடி உயரமுள்ள அந்த விசிக கொடி கம்பத்தை 45 அடியாக உயர்த்தினார்கள். ஆனால் இதனை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை..

25 அடி உயரமுள்ள கொடி கம்பத்திற்கு மட்டுமே அனுமதி என்றும், 45 அடி உயரமுள்ள கொடி கம்பத்தை நிறுவ அனுமதி இல்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விசிக நிர்வாகிகள், கொடி கம்பம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 20 அடி வரை தான் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும் என்றும், அதற்கு மேல் என்றால் சென்னையில் தான் அனுமதி வாங்க வேண்டும் என்றும் வருவாய் அதிகாரிகள் கூறினார்கள்.
இந்நிலையில் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக நேற்று முன்தினம் அனுமதி கொடுத்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அனுமதி அளித்ததாக அதிகாரிகள் அப்போது கூறினார்கள். 45 அடி உயர கொடிக்கம்பத்தை ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திருமாவளவன் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
இந்நிலையில் 25 அடி உயர கொடிக்கம்பம் 45 அடி உயர கொடிக்கம்பமாக மாற்றப்பட்டதை தடுக்கத் தவறிய காரணத்திற்காக வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி உள்ளிட்ட 3 பேரை மதுரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications